சட்டசபை தேர்தலில் திமுக அணிக்கு 1.7% தான் கூடுதல் வாக்குகளாம்- எச்சரிக்கும் ஏபிபி- சி வோட்டர் சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடந்த தேர்தலை விட 1.7% வாக்குகள்தான் கூடுதலாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறது ஏபிபி-சிவோட்டர் சர்வே.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக இடம்பெறுகின்றன. அமமுக, மநீம, நாம் தமிழர் தனித்து போட்டியிடுகின்றன. 5 முனை போட்டியை தமிழக சட்டசபை தேர்தல் எதிர்கொள்கிறது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பை ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ளது. திமுக அணி 158 முதல் 166 இடங்களைக் கைப்பற்றி ஸ்டாலின் முதல்வராவார் என்கிறது இக்கருத்து கணிப்பு.
தமிழக சட்டசபை தேர்தல்.. திமுக 166 இடங்களில் அதிரடி வெற்றி பெறும்.. ஏபிபி சிவோட்டர் சர்வே!
திமுக வாக்குகள்
ஆனால் அணிகளுக்கு கிடைக்கக் கூடிய வாக்கு சதவீதம் என்பது திமுகவுக்கு எச்சரிக்கை மணியாகவே தெரிகிறது. 2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி 39.4% வாக்குகளைப் பெற்றது. இந்த முறை 1.7% மட்டுமே கூடுதலாக பெற்று 41.1% வாக்குகளைப் பெறும் என்கிறது இந்த சர்வே.
திமுகவுக்கு எச்சரிக்கை?
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவுக்கு வலுவான தலைமை இல்லை என்கிறது திமுக. தமிழகத்தின் நலன்களை மத்திய அரசிடம் தாரைவார்த்துவிட்டது என்பது திமுகவின் பிரசாரம். ஆனாலும் திமுகவின் இந்த பிரசாரங்களால் 1.7% வாக்குகளைத்தான் கூடுதலாக பெற முடியும் என்பது அக்கட்சியின் வியூகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
15% வாக்குகளை இழக்கும் அதிமுக
அதிமுக கூட்டணியானது 2016 தேர்தலில் 43.7% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 28.7% வாக்குகளைத்தான் பெறும் என்கிறது இந்த சர்வே. ஆனாலும் 60 முதல் 68 இடங்களை அதிமுக அணி கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்கிறது கருத்து கணிப்பு. மிக கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் அதிமுக அணி 60 முதல் 68 இடங்களைப் பெறுவது என்பது நிச்சயம் மிகப் பெரிய தோல்வியாகவும் பார்க்க முடியாது.
அமமுகவுக்கு 7.8% வாக்குகள்
மேலும் அதிமுகவின் 43.7% வாக்குகளில் தினகரனின் அமமுக 7.8% வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது என்கிறது சர்வே. எஞ்சிய 8 சதவீத வாக்குகளை கமல்ஹாசனின் மநீம உள்ளிட்டவை பிரிக்கக் கூடும். ஒருவேளை அமமுக- அதிமுக இணைப்பு நிகழ்ந்தால் சட்டசபை தேர்தலில் திமுக கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும்; இரு அணிகளிடையே வாக்கு சதவீதம், வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை என அத்தனையும் மாறுவதற்கும் சூழ்நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த சர்வே முடிவுகள்.