வழக்கமான ஆர்ப்பாட்டம்தானா.. ஏன் இப்படியான 'ஆக்கப்பூர்வமான' போராட்டத்தை திமுக நடத்த கூடாதா?
Recommended Video
சென்னை: மாநாடுகளை கூட்டி மாஸ் காட்டுவதும் போராட்டங்களை நடத்தி 'அரசியல் கடனை' கழிப்பதும் ஆக்கப்பூர்வமான அரசியலாக இருக்கப் போவதில்லை என்பதை அரசியல்வாதிகள் உணருவதே இல்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் திமுக, அதே நேரத்தில் மக்களை திரட்டி நீர்நிலைகளை தூர் வாரும் பணிகளை செய்வோம் என ஏன் களத்துக்குப் போக மறுக்கிறது என்பது சாமானியர்கள் கேள்வி.
அனைத்து ஆட்சிக் காலங்களிலும் ஏதோ ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசின் கடமை; போராடுவது மட்டும் எதிர்க்கட்சிகளின் கடமை என்கிற எழுதப்படாத ஒரு அரசியல் விதியை அத்தனை கட்சிகளும் கெட்டியாகப் பிடித்து கொண்டிருக்கின்றன.
ஆனால் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் செயல்பட வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் தீர்க்கமாக இந்த அரசியல் கட்சிகள் இருப்பது இல்லை.
தந்தை பெரியார் போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள் அரசாங்கத்தை கிடுகிடுக்க வைத்தன. அரசியல் சாசனத்தையே திருத்தம் செய்தன என்பது வரலாறு. அப்படிப்பட்ட இயக்கத்தின் வாரிசுகள் நீர்த்துப் போன புளித்துப் போன மக்களால் சலிப்புடன் பார்க்கக் கூடிய போராட்டங்களை முன்னெடுப்பது மக்களிடத்தில் இருந்து அன்னியப்படுத்தவே செய்யும்.
தெ.தேசம் புதைகுழிக்கு போச்சுன்னும் சொன்னாங்க.. மீண்டும் வந்தோமே.. சந்திரபாபு நாயுடு நம்பிக்கை
தற்போதைய குடிநீர் பிரச்சனையில் மக்களின் தேவைகளை உணர்ந்து லாரிகளில் குடிநீரை விநியோகித்து வருகின்றனர் திமுகவினர், இது ஆக்கப்பூர்வமான பணிதான். இந்த பணியை அரசு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் ஒரு அரசியல் கட்சியின் பணிதான்.
இந்த இரண்டுடன் திமுகவின் கடமை முடிந்துவிடுகிறதா... இல்லையே.. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அனைத்து நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் திமுகவினரே தூர் வாரும் போராட்டத்தை நடத்துவோம் என அறிவித்து களத்துக்குத்தான் போய் பாருங்களேன்.. வெறும் கட்சிக்காரர்களை மட்டும் அல்லாமல் மக்களை திரட்டிக் கொண்டு களத்துக்கு திமுக போய் பார்க்கட்டும்...
அரசு தன்னால் செயல்பட முன்வந்துதான் ஆகவேண்டும். இல்லையெனில் மக்கள் இந்த அரசுக்கு எப்படி பாடம் புகட்ட வேண்டுமோ அதை செய்வார்கள். இதைத்தானே திமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவும் மக்களிடம் செல்லுங்கள் என்றார்.
திமுகவினரோ மக்களிடம் செல்கிறோம் என்ற பெயரில் கட்சிக்காரர்களுடனேயே நின்றுவிட்டனர்... இன்னொருபடி இறங்கி மக்களை அரவணைத்து மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தும்போதுதான் கோரிக்கைகள் நிறைவேறும் என்பதையே கள யதார்த்தங்கள் சொல்கின்றன.