அதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது?
Recommended Video
சென்னை: அதிமுக, அமமுகவில் இருந்து விலகுவோரை இணைத்துக் கொண்டு முக்கியத்துவம் தருவதில் திமுக முனைப்புடன் இருக்கிறது. திமுகவின் முன்னணி நிர்வாகிகளாக அதிமுகவினர் பலரும் வலம் வரும் நிலையில் அக்கட்சிக்கான சுயமுகத்தை தொலைத்துவருகிறது என கவலை தெரிவிக்கின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்.
1980களில் வலதுசாரி சித்தாந்தத்தை முன்வைத்து தேர்தல் அரசியலுக்கு வந்தது பாஜக. ராமர் கோவில் பிரச்சனை, இடஒதுக்கீடு எதிர்ப்பு என்பவை பாஜகவின் பிரதான கொள்கைகளாக இருந்தன. வாஜ்பாய், அத்வானி காலம் வரை இப்படித்தான் பாஜகவின் வியூகமும் இருந்து வந்தது.
ஆனால் அமித்ஷா, மோடி கைகளில் பாஜக வந்த போது சித்தாந்த அரசியலுக்கு இடைக்கால ஓய்வு கொடுத்தனர்... அதிகாரத்தை கைப்பற்ற ஜாதி, மத பிளவுகளை ஏற்படுத்துதல், ஏற்கனவே வலிமையாக உள்ள கட்சியை அப்படியே கபளீகரம் செய்தல் என்கிற வியூகத்தை வகுத்தது. வடகிழக்கில் இந்த வியூகங்களுக்கு வெற்றி கிடைக்க அடுத்தடுத்து பிற மாநிலங்களிலும் இந்த பார்முலாவை செயல்படுத்தி வருகிறது.
மாத்தாதீங்க மாத்தாதீங்க.. ரோகிணிதான் எங்களுக்கு வேண்டும்.. கிளம்பியது டிவீட்டுகள்!
பாஜகவான தெலுங்குதேசம்
தற்போது ஆந்திராவில் ஒட்டுமொத்த தெலுங்குதேசம் கட்சியையே தம்முடைய முகமாக்கி வருகிறது பாஜக. இப்படி வலிமையாக்கிக் கொண்டே வருவதால் மீண்டும் தமது அடிப்படை சித்தாந்தங்களை படுமுனைப்புடன் திணிக்க தொடங்கிவிட்டது மத்திய பாஜக அரசு. இதனை எதிர்க்கும் சித்தாந்த கட்சியாக இருப்பது திமுக மட்டும்தான்.
திமுக கொள்கை வீரியம்
முன்னெப்போதையும் விட திமுக முகாம், திராவிடம் பற்றி பேசுகிறது... ஆரியர் எதிர்ப்பு என பேசுகிறது.. மாநில உரிமைகளுக்கு போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு தொடரப்போகிறது என்கிற கேள்வியையும் இன்னொரு பக்கம் எழுப்பிக் கொண்டிருகிறது. ஏனெனில் பாஜக பாணியில் அதிமுக, அமமுகவில் இருந்து வருகிறவர்களை திமுக தொடர்ந்து அரவணைத்துக் கொண்டிருக்கிறது.
திமுகவா? அதிமுகவா?
இது கருணாநிதி காலத்தில் தொடங்கியது என்றாலும் இப்போது திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்தாலே பெரும்பாலும் அதிமுகவினர்தான்... சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என இந்த பட்டியல் நீண்டு இப்போது தங்க தமிழ்ச்செல்வன் வரை வந்துவிட்டது. திமுகவுக்கு இப்போது வேண்டுமானால் இது இனிப்பானதாக இருக்கலாம்.
பிளவுபடும் அபாயம்
ஆனால் ஒவ்வொரு அதிமுக, அமமுக பிரமுகரை இணைத்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் மாவட்டங்களில் திமுக செங்குத்தாக பிளவுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த பிளவு நிச்சயம் ஒருநாள் கூண்டோடு பெரும் பூகம்பமாகவே வெடிக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அத்துடன் இப்படி அதிமுகவினரை வைத்துக் கொண்டு திமுகவை நடத்துவதால் அக்கட்சியில் இயல்பாக இருக்கும் கொள்கைப் பற்றும் காலப் போக்கில் காலாவதியாகிவிடும் என அஞ்சுகின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்.
திமுகவின் எதிர்காலம்?
அப்படி ஒருநிலைமை திமுகவுக்கு வெகுசீக்கிரம் வந்தால் சித்தாந்த சிந்தனை இல்லாமல் பாஜகவிடம் சரணடைந்த திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் கட்சிகளின் கதிதான் திமுகவுக்கும் ஏற்படும் என்பதும் அவர்களது அச்சம். திமுகவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்கின்றனர்.