ஹத்ராஸ் கொடுமை.. நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி தலைமையில் இன்று திமுக ஒளியேந்திப் பேரணி
சென்னை: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி ஆளுநர் மாளிகை நோக்கி திமுக இன்று பேரணி நடத்துகிறது.
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் கைகளில் ஒளியேந்தி இந்தப் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஹத்ராஸ் சம்பவம்: பெண்களுக்கு நல்ல பண்பை சொல்லி கொடுங்க.. நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பாஜக எம்எல்ஏ
சர்வாதிகார ஆட்சி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மாபெரும் கொடூரங்களாக நடக்கின்றன. சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி, மக்களின் ஆட்சி என்பது மறைந்து அராஜகத்தின் ஆட்சி, சர்வாதிகாரத்தின் ஆட்சி, எதேச்சதிகாரத்தின் ஆட்சி தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கிறது என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.
எதிர்மறை
ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் போகும் அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். தன்னை குதறியவர்கள் யார் என்பதையும் அப்பெண் மரணவாக்குமூலமாகக் கொடுத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். இந்தச் சூழலில் அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்க வேண்டிய உ.பி. பாஜக அரசு, எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளது. அப்பெண்ணின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவரது பெற்றோருக்குத் தெரியாமல் அவசர அவசரமாக உடல் எரியூட்டப்பட்டுள்ளது.
கோபம்
இந்நிகழ்வு உ.பி. எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதும் ஏராளமான கோபத்தையும் கொந்தளிப்பையும் கிளப்பி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களையும், பிரியங்கா காந்தி அவர்களையும் அனுமதிக்காமல் உ.பி. காவல் துறையினர் தடுத்துள்ளார்கள். அதைவிட அராஜகமாக, ராகுல்காந்தியின் நெஞ்சைப் பிடித்து ஒரு காவல்துறை அதிகாரி தள்ளுகிறார். அவர் விழும் காட்சி, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே இழுக்கு ஆகும்.
திமுக பேரணி
பொதுவாகவே சிறுபான்மையினர், பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பாதுகாப்பு என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேள்விக்குறியாகி வருகிறது. ஊடகங்களும் பாதுகாப்பின்மையை உணர்கின்றன. இதனைச் சரி செய்து, அனைவர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.இதனை வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி.
மாலை 5 மணிக்கு
அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஒளியேந்தி அணிவகுக்க இருக்கிறது மகளிரணி. திங்கள்கிழமையன்று மாலை ஐந்து மணியளவில் ஆளுநர் மாளிகையைப் பேரணியாக அணிவகுக்க இருக்கிறார்கள் திமுக மகளிரணியினர். அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.