திருச்சியில் பொதுக்கூட்டம்...10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை வெளியிடும் மு.க ஸ்டாலின்
மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து திமுக என்றும் பின்வாங்காது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் வரும் 7ஆம் தேதி நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சியான திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பரபரப்பாக பேசி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடினார். சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் அளித்த பரிசுகளை ஏற்றுக்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார். வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக கூறினார் ஸ்டாலின்
10 ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையும் அடைய வேண்டிய இலக்கை வரையறுத்து உள்ளதாக கூறிய ஸ்டாலின். மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடலில் இது முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்கள், பல்துறை அறிஞர்களுடன் விவாதித்து தொலைநோக்கு பார்வை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொலைநோக்கு பார்வை குறித்த ஆவணத்தை அடுத்த 20 நாட்களில் 2 கோடி குடும்பத்திடம் கொண்டு சேர்க்க உள்ளதாக கூறிய ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து திமுக என்றும் பின்வாங்காது என்றும் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் ஆட்சி மாற்றம் 2 மாதத்தில் ஏற்பட உள்ளது. திமுக குறித்து மோடி பேசினார், நேற்று அமித்ஷா பேசினார். இனிமேல் பாஜகவில் இருந்து வரக்கூடிய அனைவரும் அது தான் பேசுவார்கள். ஊழலில் திளைத்து கொண்டிருக்கிற அதிமுக அரசு ஊழல் செய்ய யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.