மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை.. 'இது தான் தேர்தலின் கதாநாயகன்' - மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படுதாகவும், தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதனால், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் என்று தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை உள்ளன. இதில், முஸ்லீக் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டது.
காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, தனது தேர்தல் அறிக்கையை வரும் மார்ச் 11ம் தேதி வெளியிடுகிறது. இதுகுறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக வெற்றிகரமாகவும் நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து உரையாடி, கோரிக்கை மனுக்களைப் பெற்று அதை வைத்து தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளனர்.
இவங்க ஒருத்தரும் ஜெயிக்கக் கூடாது.. தோற்கடிங்க.. மா.செ.க்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.. !
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், "பேச்சைக் குறைத்து செயலில் நம் திறமையை காட்ட வேண்டும் என்று என்னை வளர்த்து ஆளாக்கிய கருணாநிதி கற்றுக் கொடுத்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் இருக்கும்" என்று கூறியிருந்தார்.