ராஜ்யசபா சீட்.. சபரீசனை எம்.பி.யாக்க மல்லுக்கட்டு... திமுக கிச்சன் கேபினட்டில் அதிகார யுத்தம்
சென்னை: திமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்கிற விவாதங்கள் களைகட்டி வருகின்றன. தற்போது மருமகன் சபரீசனை ராஜ்யசபா எம்.பி.யாக்குவதில் திமுகவின் கிச்சன் கேபினட் படுதீவிரமாக காய்நகர்த்துவதால் பெரும் புகைச்சல் கிளம்பியுள்ளது.
திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவருக்கு மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலி மாறன். என்னதான் திராவிட இயக்க சித்தாந்தத்தை உள்வாங்கியவராக இருந்தாலும் தேர்தல் அரசியலுக்கு ஏற்ப காய்களை நகர்த்தியவர் முரசொலி மாறன்.
திமுகவின் டெல்லி முகம்
இதனால் பாஜகவுடனும் திமுக ஒரு கட்டத்தில் கூட்டணி அமைத்தது. டெல்லியில் திமுகவின் முகமாக முரசொலி மாறன் திகழ்ந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் இந்த இடத்துக்கு மகள் கனிமொழியை முன்னிறுத்தினார் கருணாநிதி. ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் எல்லாம் தலைகீழானது.
டெல்லியில் சபரீசன்
டெல்லியில் திமுக யார் பிடியில் என்பதில் டி.ஆர். பாலு, கனிமொழி இடையே நிழல் யுத்தம் நடப்பதை அக்கட்சியினர் நன்கு உணருவார்கள்.இந்த சூழ்நிலையில்தான் திடீரென டெல்லி அரசியலில் மருமகன் சபரீசனை முன்னிறுத்தினார் திமுகவின் தலைவரான ஸ்டாலின். அவருக்காகவே டெல்லியில் அலுவலகம் கூட அமைத்து கொடுத்தனர். ஸ்டாலினின் டெல்லி சந்திப்புகளை சபரீசனே தீர்மானித்து கொண்டிருந்தார். அதனால் இந்த சந்திப்புகளில் சபரீசனும் முன்னிறுத்தப்பட்டார். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டது முதல் சபரீசன் குறித்த பேச்சே வராமல் இருந்தது.
சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி?
இப்போது ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் சபரீசன் பெயரும் அடிபட தொடங்கியிருக்கிறது. திமுகவின் மிக முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் கிச்சன் கேபினட்டைப் பொறுத்தவரையில் டெல்லி அரசியலைப் பார்க்கும் சபரீசனை ஏன் ராஜ்யசபா எம்.பி.யாக்கக் கூடாது? என்கிற கேள்வியை முன்வைக்கிறதாம். ஆனால் ஸ்டாலின் தரப்போ, கட்சியில் எந்த பொறுப்பில் இல்லாத நிலையில் எப்படி இது சாத்தியம் என்கிற கேள்வியை எழுப்புகிறது.
கிச்சன் கேபினட்டில் எதிர்ப்பு
சபரீசனை ராஜ்யசபா எம்.பி.யாக்கினால் யார் கேள்வி கேட்பார்கள்? என்கிற யதார்த்தமான கேள்வியை பதிலாக முன்வைக்கிறதாம் கிச்சன் கேபினட். எல்லோரையும் கட்சியினர் ஏற்றுக் கொண்டதைப் போல சபரீசனையும் ஏற்பார்கள் என வாதிடுகிறது கிச்சன் கேபினட். இதனால் கிச்சன் கேபினட்டுக்குள் இப்போது புகைச்சல் அதிகமாகி இருக்கிறதாம்.