முரசொலியில் மு.க. அழகிரி பெயர்.. ஸ்டாலின், கனிமொழி எல்லாரும் பேசுறாங்க.. அப்ப சமாதானம் ஓகே?
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் மு.க. அழகிரி பெயர் இடம்பெற்றிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் அண்மைக்காலமாக மு.க. அழகிரி குறித்து வெளிப்படையாக பேசுவது சமாதான முயற்சிகளின் அடுத்த கட்டமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு சற்று முன்னதாக அழகிரிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து மு.க. அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்குவதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அழகிரி முயற்சி
இதனைத் தொடர்ந்து கருணாநிதி மறைவு வரை அழகிரியை திமுகவில் சேர்க்கவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தம்மை இணைத்துக் கொள்வதற்கான பகீரத முயற்சிகளை அழகிரி தரப்பு மேற்கொண்டது. ஆனால் திமுக தலைமை இதற்கு இடம் தரவில்லை.
அழகிரி தனி கட்சி
பல்வேறு கட்ட சமாதான முயற்சிகளை கருணாநிதி குடும்பத்தினரும் மேற்கொண்டனர். ஆனாலும் எந்த ஒரு முயற்சியும் பலன்தராத நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கும்விட்டது. இப்போது தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் அழகிரி. இப்படி அழகிரியை தனித்துவிடுவதன் மூலம் திமுகவின் வாக்குகள் சில தொகுதிகளில் சிதறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் - அழகிரி
இந்த நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்திருந்தார். அதில் பிரமுகர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி சொல்லுங்கள் என ஸ்டாலினிடம் கேட்கப்பட்டிருந்தது. இதில் மு.க. அழகிரி பெயரும் இருந்தது. இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், என்னுடைய அண்ணன் என கூறியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேட்டி இன்றைய முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அழகிரி பெயர் நீக்கப்படாமல் மு.க. அழகிரி- என்னுடைய அண்ணன் என ஸ்டாலின் சொன்னது அப்படியே வந்துள்ளது.
அழகிரி குறித்து கனிமொழி
சில நாட்களுக்கு முன்னர் கனிமொழி அளித்த பேட்டி ஒன்றிலும் மு.க. அழகிரி குறித்து மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என வெளிப்படையாகவே கூறியிருந்தார். பொதுவாக அழகிரி பெயரை உச்சரிப்பதை தவிர்த்தே வந்தனர் கருணாநிதி குடும்பத்தினர். ஆனால் இப்போது ஸ்டாலினும், கனிமொழியும் அழகிரி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்கின்றனர்.. முரசொலியில் அழகிரி பெயரும் கூட இடம்பெறுகிறது. இப்படியான வெளிப்படையான பேச்சுகள்தான் சமாதான முயற்சிகளின் அடுத்த கட்டமோ? என்கிற கேள்வியை எழுப்புகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.