கூட்டணி கட்சிகளை தக்க வைக்க திமுக பகீரதபிரயத்தனம்.. தொகுதி பங்கீட்டில் கறார் போக்கை கைவிடுகிறது?
சென்னை: சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளை தக்க வைக்க திமுக பகீரதபிரயத்தனம் செய்து வருகிறது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் காட்டி வரும் கறார் போக்கை கைவிடவும் திமுக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1971-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 184 இடங்களில் வென்றது. அதைப் போல 2021 சட்டசபை தேர்தலிலும் அதிகமான இடங்க்ளில் திமுக வெல்ல வேண்டும் என்பது அக்கட்சியின் வியூகம்.
இதற்காக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை மிக கணிசமாக குறைப்பது என திமுக முடிவெடுத்தது. இதன்படி காங்கிரஸுக்கு மட்டும் 15 தொகுதிகள்; மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகள் அதிருப்தி
ஆனால் இந்த தொகுதிப் பங்கீட்டை எந்த ஒரு கூட்டணி கட்சியுமே ஏற்கவில்லை. அதேநேரத்தில் திமுக அணியில் இருந்து இந்த கட்சிகள் வெளியேறி 3-வது அணி அமைக்கவும் முன்வரவில்லை.
இறங்கி வரும் திமுக
கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை அமைத்து பெற்ற பாடம், 2019 லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் இடம்பிடித்து பெற்ற ஆதாயம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் திமுகவுடனேயே இருப்பது என முடிவு செய்துள்ளன. அத்தனை கூட்டணி கட்சிகளின் மனக்கசப்பையும் உணர்ந்து கொண்ட திமுக தலைமை இப்போது சற்று இறங்கிவர இணக்கம் தெரிவித்துள்ளதாம்.
பண்ருட்டியில் வேல்முருகன்
மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு பண்ருட்டி தொகுதியை கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி இருக்கிறதாம் திமுக. இதேபோல் கொமதேக ஈஸ்வரனுக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கி அவரையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்கிறதாம் திமுக.
தொகுதி பங்கீடு அறிவிப்பு
இப்படியான ஒரு இணக்கமான தொகுதிப் பங்கீடுதான் களத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து வேலை செய்ய உதவியாக இருக்கும் என்பதுதான் அக்கூட்டணி தலைவர்களின் கருத்துமாம். திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.