முதல்வர் பதவிக்கு முட்டுக்கட்டை...கொங்கு மண்டல திமுகவில் 'தூர்வரும்' பணிகளை தொடங்கும் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் பதவி எனும் இலக்குக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கொங்கு மண்டல அதிமுக பலத்தை அசைக்கும் வகையில் திமுகவில் தூர்வாரும் நடவடிக்கைகளை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முழுவீச்சில் தொடங்குவார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
2016 சட்டசபை தேர்தலில் திமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு கிடைத்த அமோக ஆதரவுதான். தற்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இதே நிலைதான்.
செயற்குழுவில் விவாதம்
கொங்கு மண்டலம் தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.
துரோகிகளுக்கு எச்சரிக்கை
அப்போது பேசிய ஸ்டாலின், கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சில மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு திமுகவுக்கு தோல்வியை ஏற்படுத்தியதையும் ஸ்டாலின் தரப்பு தெரிந்துதான் வைத்திருக்கிறது.
நடவடிக்கை தொடருமா?
இத்தகைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கடுமையாகவும் எச்சரித்திருக்கிறார். ஆனால் திமுக தலைமை இப்படியான எச்சரிக்கைகளை விடுப்பதும் பின்னர் ஏதோ காரணங்களுக்காக பம்மிப் போவதும் தொடர் கதையாகவே இருக்கிறது.
அசைத்தால் வெற்றி
உள்ளாட்சி தேர்தலை முன்வைத்தாவது கொங்கு மண்டலத்தில் குழிபறிக்கும் கட்சி நிர்வாகிகளை திமுக தலைமை களைஎடுக்க வேண்டும் என்பது கட்சியினர் எதிர்பார்ப்பு. இப்போதே களைஎடுத்தால்தான் சட்டசபை தேர்தலில் கொங்கு பகுதியில் அதிமுகவை அசைத்துப் பார்க்க உதவும்.
முழுவீச்சு நடவடிக்கை
கொங்கு பகுதியில் அதிமுகவின் கோட்டைகளை அசைத்துவிட்டாலே கணிசமான தொகுதிகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் ஆட்சியை மீண்டும் திமுக கைப்பற்றும்; ஸ்டாலின் முதல்வாரவார். இதை உணர்ந்து கட்சியில் தூர்வாரும் பணிகளை 100 நாள் வேலைத் திட்டம் போல் இல்லாமல் ஆக்கப்பூர்வமான மராமத்து பணியாக நினைத்து திமுக தலைமை செயல்பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.