சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக?
Recommended Video
சென்னை: சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக திரும்பப் பெறக் கூடும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்துள்ளது திமுக. இத்தீர்மானம் மீது ஜூலை 1-ல் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறக் கூடும்.
ஆனால் தற்போது திடீரென அத்தீர்மானத்தை திரும்பப் பெறும் முடிவில் இருக்கிறதாம் திமுக. சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக!
ஸ்டாலின் பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதைவிட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவதுதான் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டிருந்தார். தற்போதைய நிலையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை திமுக பெரிதுபடுத்தவில்லை என்பதையே இந்த பேட்டி வெளிப்படுத்தியது.
தோல்வியை விரும்பாத திமுக
லோக்சபா தேர்தலில் வென்றுள்ள திமுக இம்முறை சட்டசபையில் நடவடிக்கைகள் மூலம் வெற்றி முகத்தை தக்க வைக்க பார்க்கிறது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடையும் என்பது திமுகவுக்கு தெரியும்; அப்படி ஒரு தோல்வியை திமுக தலைமை விரும்பவில்லை. அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்களாம்.
வெளிநடப்புகளுக்கு முற்றுப்புள்ளி
மேலும் கடந்த காலங்களைப் போல வெளிநடப்புகளை தொடர்ந்தும் மேற்கொள்வதையும் இம்முறை திமுக கைவிட இருக்கிறதாம். சட்டசபைக்கு போவதே வெளிநடப்பு செய்யத்தான் என்கிற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இம்முடிவை திமுக மேற்கொண்டுள்ளதாம்.
சட்டசபையில் அதிரடி
அதனால் சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி தரும் முடிவோடு திமுக இருக்கிறது. இதனால்தான் சமூக வலைதளங்களில் சட்டசபையில் பேச வேண்டிய மக்கள் பிரச்சனைகளை தெரிவியுங்கள் என தொடர்ந்து ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வருகிறார். லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் நாள்தோறும் தெறிக்கவிடுவதைப் போல சட்டசபையிலும் அதிரடி காட்ட திமுக தீவிரமாக இருக்கிறதாம்.