தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பிவிட்டார்- ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதில்
சென்னை: தமிழக அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவரைப் போல தமக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். பாஜகவின் அந்த சாயத்துக்குள் தாம் சிக்கமாட்டேன் என்றார். இக்கருத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தாம் எப்போதும் வெளிப்படையாகவே பேசுகிறேன். தமிழகத்தில் சரியான, ஆளுமைக்கான தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்றும் கூறினார்.
அவரது இந்க கருத்து குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், காவிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என ரஜினிகாந்த் கூறியிப்பது அவரது தனிப்பட்ட கருத்து. வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம். தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி வெகுநாட்களாகிவிட்டது.
செம ட்விஸ்ட்.. முதல்முறையாக இப்படி ஒரு அதிரடி கருத்தை சொன்ன ரஜினிகாந்த்.. பின்னணி என்ன?
தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலில் இருந்திருந்தால் இது தெரிந்திருக்கும். அவர் அரசியலில் இல்லாததால் அது தெரியவில்லை.
தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை அவருக்கு சரியாக தெரியவில்லை. ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி வெகுநாட்களாகிவிட்டது என்பதை புரிந்து கொள்வார்.
ரஜினிகாந்த் மீது யார் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் யாருக்கு பதில் சொல்லி இருக்கிறார் என்பதும் எங்களுக்கு தெரியாது.
ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்குவேன் என சொல்லியிருக்கிறார். அவர் கட்சியை தொடங்கட்டும் பார்க்கலாம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.