தென் பெண்ணையாறு வழக்கு... தமிழக அரசு கவனமாக வாதாடவில்லை-துரைமுருகன்
Recommended Video
சென்னை: தென் பெண்ணையாறு வழக்கில் தமிழக அரசு தரப்பில் முறையாக வாதாடவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்க வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு கலந்து பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வாதாடவில்லை
தென் பெண்ணையாற்றின் குறுக்கே ஐந்து நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும், உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் அதிமுக அரசு தோற்று இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோட்டைவிட்ட அரசு
தமிழக நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையிலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் ஆகும் எந்த வழக்குகளிலும் தமிழக அரசோ,சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ எந்த கவனமும் செலுத்துவதில்லை. தொடர்புடைய வழக்கறிஞர்களை சந்தித்து அவர்களுடன் வழக்கு தொடர்பாக விவாதிப்பதும் இல்லை. கலந்து பேசுவதும் இல்லை.
அரசும் பேனர் வைக்க கூடாது.. வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி.. கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றம் உத்தரவு
கவனக் குறைவு
இதன் விளைவாக தமிழகம் தனது ஜீவாதார உரிமைகளை பல வழிகளில் இழந்திருக்கிறது. குறிப்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் "காவிரி நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையாக வாதிடாமல் கோட்டை விட்டது. அதனால் வலுவான வாரியத்திற்கு பதில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஒரு "பல் இல்லாத" மேலாண்மை ஆணையம்- அதுவும் மேற்பார்வை செய்யும் குழு போல் கிடைத்தது. அதே போல், இப்போது பெண்ணையாறு விவகாரத்திலும் உரிய முறையில் தமிழக அரசு வாதத்தை எடுத்து வைக்காமல் தமிழகத்தின் நதிநீர் உரிமையை தாரை வார்த்து இருக்கிறது.
மிகப்பெரும் பாதிப்பு
தமிழக மக்களின் உயிர் நாடி பிரச்சினையான - நதிநீர் தொடர்பான வழக்குகளில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டாமல் இருப்பதும், குறைந்தபட்சம் அந்த துறை அமைச்சர் என்ற அடிப்படையில் வழக்குகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.
சட்ட ஆலோசனை
"நதிநீர் பங்கீட்டு உரிமைகள்" இந்த அரசுக்கு முன்னுரிமை இல்லை. இந்த அரசின் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் வேறு 'பங்கீட்டில்' தான் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆகவே உடனடியாக முதலமைச்சர் அவர்களே, நேரடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.