சீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்
Recommended Video
சென்னை: நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் அடித்துள்ளார்.
விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கடந்த 3 நாட்களாக தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், சீமானை எல்லாம் அரசியல்வாதியாக கருதி, அவரை பற்றி பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என தனக்கே உரிய கிண்டலடிக்கும் பாணியில் தெரிவித்தார்.
மேலும், பொதுவாக இறந்த தலைவர்களை பற்றி விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் கருதுவதாக தெரிவித்தார். இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அண்மைக்காலமாக தாம் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அவரும் தனிமனித விமர்சனத்தை முன்வைப்பதோடு தனி நபர்களை தாக்கி பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீமான் பேச்சு எற்கத்தக்கதல்ல என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது.