அதிமுக கூட்டணியால், திமுகவுக்கும், தினகரனுக்கும்தான் லாபம்.. அடித்து சொல்லும் அரசியல் வல்லுநர்கள்
சென்னை: பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணியால், டிடிவி தினகரன் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு தான் ஆதாயம் கிடைக்கப்போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7, லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் தேமுதிகவும் இந்த கூட்டணியில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இப்படியே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்துக்கொண்டிருந்தால், தமிழகத்தில் அதிமுக 25 தொகுதிகளுக்கு உள்ளேதான் போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.
தனித்து போட்டி
மற்ற தொகுதிகளில் பாஜக உள்ளிட்ட, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள்தான் போட்டியிடும். அதிமுக தொண்டர்களை பொறுத்தளவில், எதற்காக தாங்கள் பாஜகவிற்கு வாக்கு சேகரிக்க வேண்டும், அல்லது பாமகவிற்காக, வாக்கு சேகரிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஏனெனில் கடந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்றது அதிமுக. எனவே, அதிமுக போட்டியிடாத இடங்களில், அதிமுக தொண்டர்கள் கூட தினகரன் கட்சிக்குத்தான் வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தினகரன் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துதான் போட்டியிட உள்ளது, அந்த கட்சிக்கு ஒருவகையில் நல்லதுதான்.
வாக்குகளை பிரிக்கும் தினகரன்
மற்ற தொகுதிகளிலும் கூட அதிமுகவின் 5 முதல் 10 சதவீத வாக்கு வங்கியை, தினகரன் கட்சி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதிமுகவுக்கு செல்லக்கூடிய அந்த வாக்குகளை தினகரன் கட்சி ஈர்க்க்கூடும். அதேநேரம், எதிர்த்தரப்பான திமுக கூட்டணிக்கு செல்லக்கூடிய வாக்குகள், சிந்தாமல் சிதறாமல் அங்கேயே போய்ச்சேர்ந்துவிடும். இது திமுக கூட்டணிக்கு பலன் அளிக்கக்கூடிய விஷயமாகும்.
சிட்டிங் எம்பிக்கள்
அதிமுகவுக்கு தமிழகத்தில் 37 சிட்டிங் எம்பிக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பல தொகுதிகள் செல்வதால், இப்போது பதவியிலுள்ள பல எம்பிக்கள் மீண்டும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். இது தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தும். போட்டியிட வாய்ப்பு கிடைக்காத, சிட்டிங் எம்பிக்கள் தரப்பு, தேர்தல் பணியாற்றாமல் டிமிக்கி கொடுக்க கூடும். அல்லது, தினகரன் தரப்புக்கு ஆதரவாக அவர்கள் செல்லக்கூடும். இதுவும் வாக்குகளை சிதறடிக்கும்.
ஜெயலலிதா அறிவிப்புக்கு எதிராக
கடந்தமுறை, பாஜகவுடன் அதிமுக 2004ஆம் ஆண்டு கூட்டணி அமைத்தது. அப்போது 40 தொகுதிகளிலும் படுதோல்வி சந்தித்தது இந்த கூட்டணி. இதன்பிறகு பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணியே கிடையாது என்று அறிவித்தார் ஜெயலலிதா. கடந்த முறை நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது கூட, நண்பராக இருந்தாலும், மோடிக்காக கூட பாஜகவுடன் கூட்டணி அமைக்க வில்லை ஜெயலலிதா.
அதிருப்தி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்து செல்வதற்கு காரணமான கட்சி என தொண்டர்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது பாஜக. அந்த கட்சியுடன், அதிமுக கூட்டணி வைத்துள்ளதை பெரும்பாலான தொண்டர்கள் விரும்ப வாய்ப்பு இல்லை. எனவே அந்த அதிருப்தியாளர்கள் வாக்குகள், தினகரனுக்கோ அல்லது திமுகவுக்கோ கூட செல்லக்கூடும்.
ராமதாஸ் கருத்து
"ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர் ராமதாஸ். அவரது பாட்டாளி மக்கள் கட்சியுடன், அதிமுக, கூட்டணி அமைத்ததை, பிரச்சாரக் களத்தில் மிகவும் வீரியமாக தினகரன் தரப்பு எடுத்துரைக்கப்போகிறது. அந்த பிரச்சாரம் கண்டிப்பாக அதிமுகவின் நீண்டகால தொண்டர்களுக்கு கோபத்தை வரவழைக்கும். பாமகவிற்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் எவ்வாறு தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்" என்று கேட்கிறார் ஒரு அரசியல் பார்வையாளர்.
திமுகவுக்கு சாதகம்
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி என்பது சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது. அந்த கட்சியால் பல லட்சம் வாக்காளர்களை கொண்ட லோக்சபா தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவது, என்பது எளிதில் நடவாத காரியம். ஆனால், அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை சிதறடித்து திமுக கூட்டணியின் வெற்றியை எளிதாக்குவதற்கு தினகரன் கட்சி உதவும். மேலும், கணிசமான வாக்குகளையும் பெற்று, அரசியலில் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளும். பாஜக மற்றும் பாமகவுடன், அதிமுக அமைத்துள்ள இந்த கூட்டணி இதற்கெல்லாம் வழிகோலும் என்று கணிக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.