கருணாநிதி குறித்து அவதூறு.. யூடியூப் மாரிதாஸ் மீது வழக்கு.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி மனு!
சென்னை: மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் மீது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார்.
திமுக சார்பாக தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்ட போராட்டத்தில் இறங்கி உள்ளார். சமூக வலைத்தளங்களில், சேனல்களில் திமுக குறித்தும் தன்னை குறித்தும் அவதூறாக செய்தி வெளியிடும் நபர்கள் மீது போலீசில் புகார் அளித்து வருகிறார்.
அதன்படி கடந்த வாரம் தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உதயநிதி மான்கறி சாப்பிட்டதாக அவதூறு பரப்பியதற்காக மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு யூ டியூப் விமர்சகர், மாரிதாஸ் மீது உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார்.மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி வழக்கு தொடுத்துள்ளார்.
மெகா ஆஃபர்.. ஒரு பக்கம் திமுக.. மற்றொரு பக்கம் அதிமுக.. கொரோனாவால் கதவை மூடிய நயினார் நாகேந்திரன்
திமுக தொடர்பாக பல்வேறு வீடியோக்களை மாரிதாஸ் வெளியிட்டு இருக்கிறார். பாகிஸ்தானுக்கும் திமுகவிற்கு தொடர்பு உள்ளது என்றும் கூட இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களை குறிப்பிட்டு உதயநிதி வழக்கு தொடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.