கருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா? கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக இல்லாமல் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது திராவிடர் இயக்க ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சித்தாந்த ரீதியாக திராவிடமே வேர்பிடித்து நிற்கிறது. இதை தமிழ்த் தேசியம் பெயரிலான குழுக்கள் கடுமையாக விமர்சித்து வந்தன.
நாம் தமிழர் கட்சி விஸ்வரூபம் எடுத்த நிலையில் திராவிட சித்தாந்தம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒன்றை திருச்சியில் உருவாக்கினர்.
இவர்கள் ஏற்கனவே திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணியை நடத்தினர். அப்போதே திமுகவை இந்த கூட்டமைப்பு புறக்கணித்தது சர்ச்சையானது. இந்நிலையில் சென்னையில் முழுநாள் திருக்குறள் மாநாட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
இம்மாநாட்டுக்கு திமுக தவிர அனைத்து பெரியாரிய, திராவிட இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர் அழைக்கப்பட்டனர். திருக்குறள் பெயரிலான ஒரு மாநாட்டுக்கு கூட திமுகவை அழைக்கக் கூடாது என அப்படி என்ன ஒரு தீண்டாமையை கடைபிடிப்பது என திராவிடர் இயக்க ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
திமுக தலைவராக இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருக்குறளுக்கு உரையே எழுதியவர்; சென்னையில் வள்ளுவருக்காக கோட்டமே அமைத்தவர்; கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை உருவாக்கியவரும் கருணாநிதிதான்.. அய்யன் திருவள்ளுவர் என அழைத்து அழைத்து பெருமிதப்பட்டவர் கருணாநிதி.
இப்போது இருக்கும் அசாதாரண சூழலில் திராவிடர் இயக்கங்கள், பெரியார் ஆதரவாளர்கள் ஒன்றுபடுவதுதான் முக்கியமே தவிர அவர்களைப் பிரிப்பது என்பது மிகவும் தந்திரமான ஒன்று என்கின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள். இதனால் திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.