என்ன இது... திமுக அணிக்குள்ளே மக்கள் நலக் கூட்டணியா? விசிக, இடதுசாரிகள் மீது சீனியர்கள் செம்ம கோபம்
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக அணிக்குள் இருந்து கொண்டே இன்னொரு மக்கள் நலக் கூட்டணி போல இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தைகளும் செயல்படுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக இருந்தது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போதைய ஆளும் அதிமுக அரசு மீதான அதிருப்தியால் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என ஆரூடங்கள் கூறப்பட்டன.
நாடு விடுதலைக்குப் பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
அந்த மநகூ
ஆனால் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு மொத்தமாக சென்றுவிடாத படி ஒரு மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதுதான் மக்கள் நலக் கூட்டணி. இந்த கூட்டணியில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக இடம்பெற்றன. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
அதிமுக பி டீம்
இந்த கூட்டணியால் திமுக 89 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது மக்கள் நலக் கூட்டணி. இதனால் அதிமுகவின் பி டீம் என முத்திரை குத்தப்பட்டு உறுதியானது எனவும் விமர்சிக்கப்பட்டது. இதன் பின்னர் காலங்கள் மாறின. இப்போது மக்கள் நலக் கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் திமுக தலைமையிலான அணியிலேயே தொடர்ந்து நீடித்து எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களையும் பெற்றிருக்கின்றன.
திமுக கூட்டணிகள் போராட்டம்
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 25-ந் தேதி முதல் 1 வார காலத்துக்கு தொடர் போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மட்டும் கூட்டணியாக அறிவித்துள்ளனர். திமுக அணிக்குள்ளேயே இருந்து கொண்டு இடதுசாரிகளும் விசிகவும் தனி ஆவர்த்தனம் செய்வதை திமுக சீனியர்கள் ரசிக்கவில்லையாம். அதுவும் தமிழகத்துக்கு 26-ந் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில் சக கூட்டணி கட்சித் தலைவர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர்.
மீண்டும் ம.ந.கூ?
இதனால் மீண்டும் மக்கள் நல கூட்டணியை இவர்கள் உருவாக்க திட்டமிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் திமுக சீனியர்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தரப்பில் நாம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர்கள், "திமுக மீது கூட்டணி கட்சிகளுக்கு சில வருத்தங்கள் உண்டு. இல்லைன்னு சொல்லிட முடியாது. அதேசமயம், மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தை திமுக தலைமைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்களின் ஆதரவுடன் தான் போராட்டமே நடத்தப்படுகிறது" என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, தமிழகத்துக்கு பிரதமர் வரும் போது அவருக்கு டென்சனை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் கூட்டணி கட்சிகளை திமுக தூண்டிவிட்டுள்ளது என்கிறார்கள் பாஜகவினர்.