எதிர்பார்க்கவில்லை.. உச்சகட்ட திருப்பம்.. தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம்
சென்னை: தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் சூடாக சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று திமுகவின் திருச்சி கூட்டம், அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை என்று தமிழக அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த 3 சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் முடிவையே மாற்றும் காரணிகளாகி உருவெடுத்துள்ளது.
கண்காணிப்பு வளையத்தில் 'கூகுள் பே, போன் பே' பணப் பரிவர்த்தனை - தமிழக தேர்தல் ஆணையம்
டிவிஸ்ட்
தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய முதல் டிவிஸ்ட் என்றால் அது சசிகலாவின் அரசியல் விலகல்தான். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவிற்கு திடீர் என்று சசிகலா இரவு 9.15 மணிக்கு கடந்த 3ம் தேதி அரசியலில் இருந்தே ஒதுங்கி இருப்பதாக அறிவித்துவிட்டார். அமமுக, அதிமுக, திமுக, பாஜக என்று எல்லோருக்கும் சசிகலாவின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
சசிகலா அறிவிப்பு
சசிகலாவின் அறிவிப்பால் ஒரு பக்கம் அதிமுக நிம்மதியில் இருக்கிறது. பாஜகவும் மிகப்பெரிய போட்டி முடிந்தது என்ற சந்தோசத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் பல விஷயங்களை திட்டமிட்டு வைத்திருந்த திமுக பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளது. சசிகலாவின் இந்த முடிவு தேர்தல் முடிவையே மாற்றும் வல்லமை கொண்டது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள் .
மாற்றம்
சசிகலா முடிவால் 3-5% வாக்குகள் மொத்தமாக ஸ்விங் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி சசிகலா முடிவு ஒரு பக்கம் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்க திடீர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாவது அணி அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார். திமுகவோடு இணைவார், அதிமுகவிடம் பேசுவார் என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில் மூன்றாவது அணியை கமல்ஹாசன் உருவாக்கி வருகிறார்.
கமல்ஹாசன்
இந்த மூன்றாவது அணியில் இணைவதற்காகவே சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே போன்ற கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியை விட்டே விலகிவிட்டு கமலுடன் இணைந்துள்ளனர். கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் சரத்குமாரும் அறிவித்துவிட்டார். இந்த மூன்றாவது அணி இன்னும் முழுமைபெறவில்லை. தேர்தலும் நெருங்கிவிட்டது.
நெருக்கம்
ஆனால் மூன்றாவது கூட்டணி கண்டிப்பாக சில சதவிகித வாக்குகளை பிரிக்கும். அதிலும் மநீம லோக்சபா தேர்தலில் நன்றாக போட்டியிட்ட நிலையில் இப்போது கூடுதல் வாக்குகளை பெற்று கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் கேம் சேஞ்சராக வலம் வரும் வாய்ப்புகள் கூட உள்ளன. மூன்றாவது அணி வேகமாக உருவாகி வருவதால் எதிர்க்கட்சி திமுக பெரிய அளவில் கலக்கம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது டிவிஸ்ட்
இன்னொரு பக்கம் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிகளுக்கு மிக குறைந்த இடங்களை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதன்படி திமுகவில் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 6 இடங்களையும், காங்கிரஸ் 25 இடங்களையும் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் அதிமுகவில் பாஜக 20, பாமக 23 இடங்களை பெற்றுள்ளது.
120 இடங்கள்
பெரிய கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்காமல் திமுக, அதிமுக இரண்டுமே அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த முறை இரண்டு முக்கிய கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளிடம் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டுள்ளது. இதனால் திமுக 175+ இடங்களில், அதிமுக 160+ இடங்களிலும் போட்டியிடும். இதனால் கிட்டத்தட்ட 120 இடங்களில் திமுக - அதிமுக நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.
மோதும்
இரண்டு கட்சிகளும் இப்படி 120 இடங்களில் மோதினால் அது தேர்தல் சமயத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். எது வலுவான கட்சி, மக்கள் மனநிலை எப்படி, திமுக, அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இந்த 120+ இடங்கள் தீர்மானித்துவிடும். எதிர்பார்க்க முடியாத சதுரங்க வேட்டையாக இந்த தொகுதிகள் அமைய போகிறது.. இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.