அஞ்சல் தேர்வு விவகாரம்.. சட்டசபையில் காரசார விவாதம்.. திமுக வெளிநடப்பு
சென்னை: அஞ்சல் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகர் மறுத்துவிட்டதை அடுத்து சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டசபையில் கடந்த 1-ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று கூடியது.
காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அஞ்சல்துறை தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் நடத்தியது குறித்து சட்டசபையில் எதிரொலித்தது.
அஞ்சல்துறை பணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சேர முடியாத நிலையை இந்தி, ஆங்கில தேர்வு ஏற்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஞ்சல் துறை தேர்வை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
எதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்?
இதனை தொடர்ந்து அஞ்சல் தேர்வை தமிழில் நடத்தும் பிரச்சனையில் முதல்வர் பழனிசாமி - துரைமுருகன் இடையே சட்டமன்றத்தில் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய துரைமுருகன் அனைத்து துறைகளில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எனவே மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. இதை தொடர்ந்து காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. இதனால் பரபரப்பு எழுந்தது.