உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது; உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி:
முன்னர் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடுகளை வழங்காமல் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். தேர்தல் தேதியெல்லாம் அறிவித்தார்கள். ஆகவே உரிய ஒதுக்கீட்டுடன் தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்றுதான் ஆர்.எஸ். பாரதி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இல்லை; முறையாக நடத்த வேண்டும். ஒதுக்கீடுகள் முறையாக இல்லை, அதை சரி செய்யுங்கள் என்று கோரித்தான் நீதிமன்றத்துக்கு சென்றோம். சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இதை நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். ஆனால், திரும்பத் திரும்ப அதே பொய்யை அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 12,500க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம பகுதிகளுக்கு போய் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனே நடத்துவோம். அ.தி.மு.க. ஆட்சியில் நடத்த மாட்டார்கள். ஏன் என்றால் தோல்வி பயம்! அதனால் நடத்த மாட்டார்கள் என திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறோம்.
இப்போதும் திட்டமிட்டு நான்கு மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக புதிதாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் 3 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் 2 மாவட்டங்களாகவும், விழுப்புரம் 2 மாவட்டங்களாகவும், திருநெல்வேலி 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 5000 வாக்குகள் பெறக்கூடிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எப்படி பிரித்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை நாங்கள் கேட்டுள்ளோம்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே உயர்நீதிமன்றம் எந்தெந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளதோ, அந்த அடிப்படையில் நடத்தப்படுகிறதா என்பது குறித்து எங்கள் அமைப்புச் செயலாளர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து, தேர்தலை எப்படி நடத்தபோகிறீர்கள் என்றுதான் கேட்டுள்ளார். சிசிடிவி கேமரா பொருத்துவீர்களா? ஒதுக்கீடு முறையாக செய்துள்ளீர்களா? உயர்நீதின்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்தப்போகிறீர்களா? மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அவற்றைச் சரிசெய்து தேர்தல் நடத்தப்போகிறீர்களா? என்றுதான் கேட்டுள்ளோம்.
மற்றபடி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், இன்றைக்கு இருக்கும் அதிமுக ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதோ என்பதுதான் எங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம். நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.