காங்.குக்கு எந்த தொகுதிகள்.. பேச்சில் இழுபறி.. மீண்டும் ஆலோசிக்க முடிவு
Recommended Video
சென்னை: திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக தொகுதி பங்கீட்டு குழுக்கள் இன்று ஆலோசனை நடத்தின.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக, 10 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது திமுக. பிற தோழமைக் கட்சிகளுக்கு மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்கிறார்கள்.
குழுக்கள் ஆலோசனை
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ராமசாமி, தங்கபாலு ஆகிய மூவரும் அறிவாலயம் வந்தனர். திமுக சார்பில் பொருளாளர், துரைமுருகன் மற்றும், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொகுதிகள்
கன்னியாகுமரி, ஈரோடு, விருதுநகர் உட்பட தொகுதிகளை காங்கிரஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்திற்கு பிறகு, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: திமுக குழுவிடம் எங்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. தோழமை உணர்வோடு இருந்தது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள். பல்வேறு விஷயங்களும் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது பற்றி அறிவிக்கப்படும். மீண்டும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்.
திமுக முடிவு
10 தொகுதிகளிலும் உள்ள சாதக, பாதக அம்சங்களை பேசினோம். திமுகவும் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர், நாங்களும், எங்களின் பிரச்சினைகளை அவர்களிடம் கூறினோம். பிற கட்சிகளுடனும் திமுக ஆலோசனை நடத்த வேண்டுமல்லவா, அதன்பிறகு தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.