234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்
சென்னை: 234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிட்டாலும், வெற்றி பெறமுடியும் என்று ஆணித்தரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாக வெளியான தகவலால் பரபரத்து கிடக்கிறது தமிழக அரசியல்.
Recommended Video
பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக, திமுகவுடன் கைகோர்த்துள்ளார். இதையடுத்து ஸ்டாலினுடன் முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தை சமீபத்தில் அவர் நடித்தி முடித்தார்.
அப்போதுதான், தேர்தலை சந்திப்பதற்கு ஒரு புது யுக்தியை அவர் முன்வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.
கூட்டணி கட்சிகள் எதற்கு.. 234 தொகுதிகளிலும் திமுக தனித்தே போட்டி.. ஒரே போடாக, போட்ட பிரசாந்த் கிஷோர்
234 தொகுதிகள் தனித்துப் போட்டி
தன்னுடைய கணக்கின்படி இப்போதுள்ள சூழ்நிலையில் 234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிட்டாலும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று ஸ்டாலினிடம் அழுத்தந்திருத்தமாக கிஷோர் கூறியதாக வெளியாகியுள்ளன தகவல்கள். இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை திமுக தங்களை கூட்டணியிலிருந்து கழட்டி விடுமோ என்ற ஒரு சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.
கூட்டணி கட்சிகள் கலக்கம்
போதாத குறைக்கு, ஆர்.எஸ்.பாரதி, நேரு போன்ற திமுகவின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சியினரை சீண்டும் வகையில் சமீபத்தில் கொடுத்த பேட்டிகள், கிஷோரின் ஆலோசனைகள், இந்த இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்து ரொம்பவே முழி பிதுங்கிப் போய் இருக்கின்றன திமுக கூட்டணி கட்சிகள். ஆனால் கிஷோர் கூறியபடி கூட்டணி இன்றி திமுக களம் இறங்குமா? அல்லது கருணாநிதி பாணியில், முடிந்த அளவு கூட்டணிக் கட்சிகளை கூட்டிக்கொண்டு செல்லுமா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
ரஜினி கூட்டணி பலம் பெறும்
இதுதொடர்பாக தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் கூறியது இதுதான்: திமுக கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால் அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை வேறு கூட்டணியை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவர்கள் அதிமுக பக்கம் கூட செல்லக்கூடும். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அதற்கு அதிக வாய்ப்பு இல்லை. ஆனால் ரஜினிகாந்த் புதிதாக கட்சி துவங்கும் போது, அவருடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இத்துடன், மக்கள் நீதி மையம் கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டால் வாக்குகள் சிதறும். இது திமுகவுக்கு பெரும் பாதகமாக மாறிவிடும்.
கருணாநிதி யுக்தி
மக்கள் நல கூட்டணி காரணமாக, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை திமுகவுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் கருணாநிதி எதற்காக கூட்டணி கட்சிகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் காலங்களில் இறங்கிச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற ரகசியம் திமுகவில் இருக்கும் பலருக்குமே புரிய ஆரம்பித்தது.
பழம் நழுவ எதிர்பார்த்தார்
கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தனியாக களம் இறங்கியது. ஆனால், அப்போதும்கூட தனித்து போட்டியிட விரும்பவில்லை கருணாநிதி. கூட்டணி கட்சிகளை தான் பெரிதாக நம்பினார். அரசியல் எதிரியாக இருந்த விஜயகாந்த்தை கூட தங்கள் பக்கம் கொண்டுவர கடைசிவரை, பழம் நழுவி பாலில் விழ காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார் கருணாநிதி. இப்போது கருணாநிதி இல்லாத களத்தில் முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் திமுக புதிதாக ஒரு முயற்சியை பரிட்சித்து பார்க்கும் என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறி. ஏனெனில் தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் திமுக தோல்வியை தழுவியது, என்பது, எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு, இதுதான் முதல்முறை. மேலும், கட்சியின் தலைமைக்கும் மாற்றம் வந்துள்ளது. இந்த நிலையில் விஷப்பரீட்சை வேண்டாம் என்றுதான் ஸ்டாலின் நினைக்கிறார் என்கிறார்கள் கழக வட்டாரத்தில்.
வாக்குகள் சிதறக் கூடாது
கூட்டணி கட்சிகள் தயவோடு ஆட்சிக்கு வந்துவிட்டால், அதன் பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருக்கிக் கொண்டு, லோக்சபா தேர்தலில் வேண்டுமானால் தனித்து களமிறங்கி தனது செல்வாக்கை நிரூபிக்க ஸ்டாலின் விரும்புவாரே தவிர, கைக்கு கிடைத்து இருக்கக்கூடிய வாய்ப்பை நழுவ விட மாட்டார்.. கொஞ்சம் கூட வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காகத்தான் பிரசாந்த் கிஷோரையே, இவ்வளவு பணம் கொடுத்து, திமுக பக்கம் அழைத்து வந்துள்ளார் ஸ்டாலின். அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிகள் பிரிந்து சென்று வாக்குகள் சிதறுவதை அவர் விரும்ப மாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பிரசாந்த் கிஷோரை வைத்து திட்டம்
ஆனால் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த, இந்த ஆலோசனையை ஏன் ஊடகங்களில் கசியவிடப்பட்டன, என்ற கேள்விக்கு ஒரு அரசியல் விமர்சகர்கள் இப்படி பதில் சொல்கிறார்கள்: திமுக கூட்டணி கட்சிகள் ராஜ்யசபா எம்பி சீட், மற்றும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து வருகின்றன. இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பிரசாந்த் கிஷோர் பயன்படுவார் என்று திமுகவில் சில தலைவர்கள் நினைக்கிறார்கள்.
தயங்க மாட்டோம்
ஒருவேளை எங்களிடம் அதிக சீட் கேட்டு தொந்தரவு செய்தால், கிஷோர் ஆலோசனைப்படி தனித்து நின்று வெற்றி பெறவும் தயங்கமாட்டோம் என்ற ஒரு சமிக்ஞை திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு இவ்வாறு கொடுக்கப்படுகிறது என்கிறார்கள் அவர்கள். எது எப்படியோ புலி வருது.. புலி வருது என்ற கதைதானே தவிர, திமுக கண்டிப்பாக தனது கூட்டணிக் கட்சிகளை உதறி தள்ளி ரிஸ்க் எடுக்காது என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்கள் அவர்கள்.