நகரவே கூடாது.. போலீஸ் வாகனத்தை மறித்து நிறுத்திய திமுகவினர்.. இறங்கி வந்த கனிமொழி.. கலைந்த கூட்டம்
சென்னை: உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது அக்கட்சி எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதோடு, அவரின் உடல் அவசரகதியில் போலீசாரால் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுக்க பெரும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
ஒளி ஏந்தி பேரணி
முதலில் காவல்துறை அனுமதி மறுத்தாலும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்றதால் வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் அனுமதி வழங்கியது காவல்துறை. ஐந்து பேரை மட்டும் செல்லலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன் பேரில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் ஐந்து பேர் கொண்ட தலைவர்கள் குழுவினர், பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து திரும்பினர். இந்த நிலையில் உத்தரபிரதேசம் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து,ம் அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டும், கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி, சென்னையில் இன்று, ஒளி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.
கனிமொழி கைது
சைதாப்பேட்டை பகுதியில் ஊர்வலம் சென்றபோது, கனிமொழி உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து காவல் துறையின் பஸ் ஒன்றில் ஏற்றினர். இதைப் பார்த்ததும் மகளிர் அணியினர் கொதித்துப் போயினர். காவல்துறை பஸ் முன்பாக உட்கார்ந்து கொண்டு இதற்குமேல் வாகனத்தை நகரவிடமாட்டோம் என்று தர்ணா நடத்தினர்.
போக்குவரத்து நெரிசல்
அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
A cruel rape happened in Uttar Pradesh, where a girl was brutally raped. UP govt is trying to hide the rape incident.
— ANI (@ANI) October 5, 2020
Since BJP govt has come to power, crime against women have been rising: DMK MP Kanimozhi Karunanidhi at the vigil in Chennai before being detained by the police https://t.co/Hdg1iurzbL pic.twitter.com/ZrxNWRYAku
கனிமொழி கோரிக்கை
பஸ்ஸிலிருந்து இதை கவனித்த கனிமொழி கீழே இறங்கி வந்து தர்ணா நடத்திய திமுக தொண்டர்கள் மற்றும் மகளிரணியினரிடம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பிறருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை எடுத்துச் சொன்னார்.
கனிமொழி கூறியதையடுத்து தொண்டர்கள் கூட்டம் அங்கிருந்து எழுந்து சென்றது. இதன் பிறகுதான் போலீஸ் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தி கொண்டு செல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.