கனிமொழி வீட்டில் குவியும் திமுக பெண் நிர்வாகிகள்! 11 மாநகராட்சிகள் மகளிருக்கு ஒதுக்கீடு எதிரொலி!
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கனிமொழி தயவில் சீட் வாங்குவதற்காக திமுக மகளிரணி நிர்வாகிகள் சிஐடி காலனி இல்லத்துக்கு படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.
கொரோனா கால கட்டுப்பாடுகளை கூறினாலும் கனிமொழியை பார்க்காமல் நகரமாட்டோம் என பல பெண் நிர்வாகிகள் பிடிவாதம் பிடிக்கிறார்களாம்.
3 நாளாச்சு.. முடியல.. கோவையில் குடோனுக்குள் புகுந்த 'மாயாஜால' சிறுத்தை.. பரபரப்பில் மக்கள்
திமுக மகளிரணி நிர்வாகிகளின் வரவால் சிஐடி காலனி இல்லம் பழையபடி மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது.
11 மாநகராட்சிகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 11 மாநகராட்சிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார் தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா. அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
மகளிரணி நிர்வாகிகள்
இதேபோல் ஏனைய மாநகராட்சிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக இந்த முறை பெண் வேட்பாளர்களையும் தேர்தல் களத்தில் காண முடியும். இந்தச் சூழலில் வார்டு கவுன்சிலர் தொடங்கி நகராட்சி சேர்மன், துணை தலைவர், துணை மேயர், மேயர் என பல பதவியிடங்களுக்கு இப்போதே காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள் மகளிரணி நிர்வாகிகள்.
கனிமொழி இல்லம்
அந்த வகையில் அணியின் மாநிலச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழியை பிடித்தால் அவரது சிபாரிசில் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் அவரை காண ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள் மகளிரணி நிர்வாகிகள். இதனால் கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்தை மீண்டும் பரபரப்பாக காண முடிகிறது. இதனிடையே மேயர், நகரமன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேரடியாகவா அல்லது மறைமுகவாகவா என்ற விவரம் இல்லை.
உரிய அங்கீகாரம்
கனிமொழியை சந்திக்கும் பெண் நிர்வாகிகள் கூறுவதெல்லாம், கட்சிக்காக உழைத்த தங்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதேயாகும். அதிமுகவை பொறுத்தவரை மகளிரணியில் கட்சிக்காக உழைத்த விசாலாட்சி (திருப்பூர்), ஜெயா(திருச்சி), மல்லிகா பரமசிவம் (ஈரோடு), விஜிலா சத்யானந்த் (நெல்லை)போன்றோரை மேயராகவும் கோகுல இந்திரா, வளர்மதி போன்றோரை அமைச்சராகவும் ஆக்கி அங்கீகரித்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.