52-வது வயதில் அடியெடுத்து வைத்த கனிமொழி... பிறந்தநாள் கொண்டாட்டம் தவிர்ப்பு
சென்னை: திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
52-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள கனிமொழி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, அதாவது கருணாநிதி மறைவுக்கு பிறகு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறார்.
எளிமையான முறையில் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு தனது அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவததோடு பிறந்தநாள் விழாவை சுருக்கிக் கொண்டார் கனிமொழி.
ஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்
நேரில் சந்திப்பு
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது பிறந்தநாளை ஒட்டி மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நீண்ட ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என தனது தங்கையை மனதார வாழ்த்திய ஸ்டாலின் பட்டு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
தவிர்ப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கனிமொழி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாடி அசத்துவார்கள். சென்னை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளும், சிஐடி காலனியில் விளம்பரப் பதாகைகளும், வைத்து வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் இருந்தது.
அறிவுறுத்தல்
ஆனால் கருணாநிதி மறைவுக்கு பிறகு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு கண்டிப்புடன் ஆதரவாளர்களிடம் கூறிவிட்டார் கனிமொழி. மேலும், நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடக்கும் சூழலில் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே கனிமொழி அறிக்கை விட்டுவிட்டார்.
மகளிரணி
கனிமொழியின் பிறந்தநாளான இன்று மகளிரணியை சேர்ந்த ஒரு சில நிர்வாகிகள் மட்டும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். மற்றபடி பெரியளவில் எந்த கொண்டாட்டங்களும் இல்லை. இதனிடையே திமுக மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, போன்றோர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்களாம்.