சின்னப் பிள்ளை மாதிரி போட்டுக் கொடுக்கிறாரே... "சீனியர்" மீது இளம் திமுக எம்.பி.க்கள் அதிருப்தி!
சென்னை: கருணாநிதி காலத்து திமுகவில் இருந்ததைப் போல இப்போதும் 'கெத்து' காட்டி வரும் சீனியர் எம்.பி. ஒருவர் மீது இளம் எம்.பி.க்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம். இதனை சரிசெய்யவே அண்மையில் அறிவாலயத்தில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டமே கூட்டப்பட்டதாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் அந்த சீனியர் எம்.பி. அண்மையில் அவருக்கு திமுகவில் மிக முக்கிய பதவி கொடுக்கப்பட்டது.
அந்த பதவி கிடைத்த நாளிலேயே அவர் செய்த அலப்பறைகளால் அறிவாலயமே அதிர்ந்து போனது. ஏற்கனவே வாரிசையும் அரசியல் களத்துக்கு இறக்கிவிட்ட நிலையில் லோக்சபா தேர்தலில் அந்த சீனியருக்கு வாய்ப்பு தர கட்சிக்குள் கடும் எதிர்ப்புகளும் எழுந்தன.
டெல்லியில் திமுக எம்.பிக்கள்
ஆனால் அனைத்தையும் மீறி லோக்சபா தேர்தலில் வென்றுவிட்டார் அந்த சீனியர். இதனிடையே டெல்லியில் முகாமிடும் திமுக புதிய எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் கோரிக்கைகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்து வருகின்றனர்.
கட்டுப்பாடு விதித்த சீனியர்
எம்.பி.க்களின் இந்த செயல்பாடுகள் அந்த சீனியரை கடுப்பேற்றிவிட்டதாம். இதனால் தமது அனுமதியில்லாமல் மத்திய அமைச்சர்களை எம்.பி.க்கள் சந்திக்க கூடாது என கறார் காட்டியிருக்கிறார் சீனியர். ஆனால் அவரை எம்.பி.க்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.
அறிவாலயத்தில் பஞ்சாயத்து
இதை தலைமையிடம் சொல்லி புலம்பியிருக்கிறார் சீனியர். இதனையடுத்தே சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டதாம். அங்கேயும் இதே பிரச்சனையை சீனியர் எழுப்பியிருக்கிறார்.
எம்.பிக்கள் எதிர்ப்பு
ஆனால் எம்.பி.க்கள் பலரும், கட்சிக்கு விரோதமாக ஏதேனும் நாங்கள் செய்தால் நீங்கள் கண்டிக்கலாம்.. அதற்கான உரிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கோரிக்கையையும் உங்களிடம் கொண்டு வந்து கொடுத்து நீங்கள் மத்திய அமைச்சரிடம் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தந்து அதன் பின்னர் நாங்கள் சந்திப்பது என்பதெல்லாம் நடைமுறைக்கு சரிவராது என தலைமையை வைத்துக் கொண்டே திட்டவட்டமாக கூறிவிட்டனராம்.
சீனியர் மீது அதிருப்தி
திமுக தலைமையும் எந்த உத்தரவும் சொல்லாமல் கூட்டத்தை முடித்துவிட்டதாம். சீனியராக இருந்து கொண்டு சின்னப் பிள்ளை மாதிரி போட்டுக் கொடுக்கிறாரே என அதிருப்தியில் இருக்கின்றராம் இளம் எம்.பி.க்கள்.