60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி!
திமுக கட்சியின் இளைஞரணியில் 60 நாட்களில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
சென்னை: திமுக கட்சியின் இளைஞரணியில் 60 நாட்களில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது.
காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெற்றது. திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
என்ன தீர்மானம்
இதில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 474 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முழு திட்டத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான அறிவிப்புகளை இதில் வெளியிட்டார். இந்த திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
என்ன வயது
அதில் முக்கியமாக திமுக இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 35 வரை உள்ளவர்கள் திமுக இளைஞரணியில் சேரலாம் என வயது வரம்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் இளைஞர்களிடம் கட்சி வளரும்.
மூன்று மாதம்
அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில மாநாடு நடத்தப்படும். பெரிய அளவில் இந்த மாநாடு நடத்தப்படும். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதி இளைஞர் அணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடந்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது..
என்ன முக்கியம்
மிக மிக முக்கியமாக செப்.14 முதல் நவ.14-க்குள் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 60 நாட்களில் 30 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளனர். மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சி இளைஞர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுக்கும்.
எப்படி கட்சி
அதேபோல் கட்சியில் சேரும் இளைஞர்கள் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தூர்வாரப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் நீர்நிலைகள், அதிக பிளாஸ்டிக் பயன்பாடுகள் ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க திமுக இளைஞரணி இனி அதிக கவனம் செலுத்தும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை, மறைந்த திமுக முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.