வசதியான, வயதான பெரியவர்கள்... ரஜினிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் விவகாரத்தில் வன்முறை தீர்வாகாது என ரஜினி கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் சூசகமான பதிவு ஒன்றை ட்விட்டரில் போட்டுள்ளார்.
உரிமைக்கான போராட்டத்தை கண்டு வன்முறை என அஞ்சும் வசதியான, வயதான, பெரியவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு திமுக நடத்தும் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம் என உதயநிதி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சிகளும் குடியுரிமைக்காக போராட்டம் நடத்தி வரும் சூழலில் வன்முறை தீர்வாகாது என ரஜினி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாணவர், மக்கள் போராட்டத்தை வன்முறை என்று வர்ணித்த ரஜினி.. வெடித்துக் கிளம்பும் கடும் கண்டனங்கள்!
சர்ச்சை
குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள், இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகள், மதச்சார்பற்ற அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அறிவுரை
வன்முறை யார் செய்தது என்பதை குறிப்பிடாமல், பொத்தாம்பொதுவாக வன்முறை தீர்வாகாது என ரஜினி கூறிய கருத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்யாமல் வன்முறை கூடாது என அறிவுரை மட்டுமே வழங்கியிருந்தார்.
ரஜினிக்கு பதிலடி
இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினி கருத்துக்கு கவுன்டர் கொடுக்கும் வகையில் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வரும் 23-ம் தேதி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் பேரணியில், உரிமைக்கான போராட்டத்தை கண்டு வன்முறை அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களை வீட்டில் விட்டுவிட்டு வரவும் எனக் கூறியுள்ளார்.
சாடல்
உரிமைக்கான போராட்டத்தை வன்முறை என்ற ஒற்றை வார்த்தையில் ரஜினி கூறியுள்ளார் என்கிற பொருள்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவை பல்லாயிரக்கணக்கானோர் வரவேற்று லைக் கொடுத்துள்ளனர்.