இலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்...! உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி
Recommended Video
சென்னை: திமுக இளைஞரணியில் கரூர் மாவட்டத்தில் இருந்து 60 ஆயிரம் இளைஞர்களை புதிதாக இணைப்பேன் என அந்த அணியின் செயலாளர் உதயநிதியிடம் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியம் ஜெகதாபி, வேலாயுதம்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பாக தூர்வாரப்பட்டுள்ள குளத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் உதயநிதி. இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி குளத்தை வேகமாக தூர்வாரியதற்காக மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜியையும், இளைஞரணி நிர்வாகிகளையும் பாராட்டினார்.
இதைத்தொடர்ந்து திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட அவர் அது குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதால் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. இப்போது சொல்கிறேன் கரூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் இளைஞர்களை திமுக இளைஞரணியில் இணைப்பேன் என உதயநிதியிடம் உறுதியளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதயநிதி வியந்துபோனார்.
அதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி மொழி விவகாரத்தில் திமுக பின்வாங்கவில்லை என்றும், திமுகவின் போராட்ட அறிவிப்பை அடுத்து அமித்ஷா தான் பின்வாங்கினார் எனவும் கூறினார். மேலும், இது திமுகவுக்கு கிடைத்த வெற்றிதான் என்றும், இனி வரும் காலத்தில் இந்தியை திணிக்க முயற்சித்தால் திமுக இளைஞரணி போராட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.