"செம டேக்டிக்ஸ்".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..!
திமுகவின் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன
சென்னை: திமுக தரப்பு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டதாகவே கருதப்படுகிறது. பிகே கொடுக்கும் ஐடியாக்களா அல்லது திமுக தரப்பிலேயே கிளம்பி வரும் ஐடியாக்களா என்று தெரியவில்லை.. ஆனால் அடுத்தடுத்து திட்டத்தைப் போட்டு திகைக்க வைத்து வருகிறது எதிர்த் தரப்பை.
இப்போதும் கூட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக. யாரும் எதிர்பாராத அதிரடி திட்டம் இது.. தொகுதி தொகுதியாக போகப் போகிறார் ஸ்டாலின்.. அதை விட முக்கியமானது, மக்களிடம் புகார் வாங்கப் போகிறார்.
இது ஒரு ஆளுங்கட்சிக்கு எப்படியும் பிடிக்காத விஷயம்.. அதை விட முக்கியமானது, ஆளுங்கட்சியின் செயல்பாட்டையே பல்ஸ் பிடித்துப் பார்க்கும் விஷயமாகும். நிச்சயம் இதை அதிமுக எதிர்பார்க்கவில்லை.
இயக்கம்
நாட்டை ஆட்சி செய்பவர்தான் மக்களிடம் குறை கேட்பர்... இதுதான் இயல்பானது. ஆனால் இங்கு அந்த வேலையை அதிமுக தரப்பு இதுவரை செய்யவில்லை.. அதாவது மக்களிடம் உங்களுக்கு ஏதாவது குறை இருக்கா. எங்களை நாங்கள் திருத்திக்க வேண்டியிருக்கா.. என்று இதுவரை எந்த மக்கள் இயக்கத்தையும் கையில் எடுக்கவில்லை.
ஏவ வேலு
ஆனால் திமுக அதைச் செய்து விட்டது. அதுதான் இப்போது மெயின் பிக்சரே.. தொகுதி தொகுதியாக போகப் போகும் ஸ்டாலினிடம் மக்கள் புகார்களைக் கொண்டு வந்து குவிக்க வேண்டும் என்ற முடிவோடு திமுகவினரும் களம் இறங்கி விட்டனர்... இதுதொடர்பாக ஏ.வ. வேலு கூட ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 29ஆம் தேதி ஸ்டாலினிடம் நேரடியாக மனுக்களைத் தரலாம் என அறிவித்துள்ளார்.
பிரச்சார உத்தி
இது திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.. இது தேர்தல் பிரச்சார உத்திதான் என்றாலும் ஆளும் கட்சிதான் இந்த மாதிரியான திட்டத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். அதுதான் அதிமுகவுக்கு செல்வாக்கு தேடித் தருவதாகவும் அமைந்திருக்கும். ஆனால் அதை திமுக கையில் எடுத்து விட்டது. இதனால் அதிமுகவினர் கையைப் பிசைந்து கொண்டுள்ளனர்.
அதிரடிகள்
திமுக தரப்பில் அடுத்தடுத்து அதிரடிகளைக் கொடுத்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் முதல்வர் எடப்பாடியார் மட்டும்தான் பதிலடியாக பேசிக் கொண்டிருக்கிறார்... மாற்றாக அதிரடித் திட்டங்களை இன்னும் அதிமுக களத்தில் இறக்காமலேயே உள்ளது... இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.. ஒருவேளை திமுகவையே திகைக்க வைக்கும் அளவுக்கு ஏதாவது திட்டத்துடன் அதிமுக அமைதி காக்கிறதா என்றும் தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.