அவரும் இல்லை.. எவரும் இல்லை.. இவர்தானாம்... பி.கே. கை காட்ட போவது யாரை.. பரபரக்கும் அறிவாலயம்!
சென்னை: திமுகவின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் மறைவையடுத்து அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி முன்னெழுந்து வருகிறது.. அந்த வகையில்.. கிட்டத்தட்ட 5, 6 மூத்த தலைவர்களின் பெயர்களின் உச்சரிப்பும் அதிகமாக ஒலிக்க தொடங்கி உள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி... தலைவர் பதவிக்கு அடுத்து, முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.. கட்சியின் எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவதுகூட பொதுச்செயலாளர்தான். எந்த ஒரு காரியத்தையும் இவர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
அதனால்தான் கருணாநிதி இந்த பதவியை அன்பழகனிடமே கடைசிவரை தந்தார். இப்போது அன்பழகன் மறைவுக்கு பிறகு, இந்த பொதுச்செயலாளர் பதவி மூத்த தலைவர்களுக்குதான் வழங்கப்படும் என்பதால், அதற்கு பொருத்தமானவராக துரைமுருகன் இருப்பதாக கட்சி கருதுகிறது. அப்படி துரைமுருகனை திமுகவின் பொதுச்செயலாளராக மாற்றிவிட்டால் பொருளாளர் பதவியை யாருக்கு தருவது என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
சீனியர்
பொதுச்செயலாளர் பதவிக்கு முதல் சாய்ஸ் துரைமுருகன்தான்.. அடுத்ததாக, ஐ.பெரியசாமி, எவவேலு ஆகியோர் இருந்தாலும் சீனியாரிட்டி அடிப்படையில் துரைமுருகன்தான் ஃபர்ஸ்ட் சாய்ஸில் உள்ளார். காரணம், ஒரு பொதுச் செயலாளர் பதவிக்குரிய பக்குவம், கட்சிப் பணி, அனுசரணைகள் என அனைத்தையும் நன்றாக அறிந்தவர் துரைமுருகன்தான்.. அதே சமயம் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஐ.பெரியசாமி பொது செயலாளர் ஆவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டம்
முன்பு மாதிரி இருந்தால் பரவாயில்லை.. இப்போது பிரசாந்த் கிஷோர் உள்ளே இருக்கிறார்.. ஆலோசனைகளை தருகிறார்.. இதற்கும் ஒரு ஐடியா தந்துள்ளராம்.. அதாவது, ஒவ்வொரு முக்கிய மாவட்ட பகுதிகளும் மூத்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.. திருவண்ணாமலையில் எவ வேலு உள்ளார்.. துரைமுருகன் வேலூரில் உள்ளார்.. கேஎன் நேரு, அன்பில் மகேஷ் போன்றோர் திருச்சி பொறுப்பில் உள்ளனர். ஆனால் தென் மாவட்டத்திற்கு மட்டும் யாரும் பொறுப்பாளர்கள் இல்லை.
முக அழகிரி
அதனால் ஐ பெரியசாமியிடம் பொறுப்பை தரலாமா என்றுதான் யோசனை தரப்பட்டுள்ளதாம்.. ஐ பெரியசாமியை பொறுத்தவரை தென் மாவட்டத்தில் முக அழகிரிக்கு இணையான செல்வாக்கை பெற்றவர்.. அழகிரி இருந்தபோது, தென்மாவட்டங்களை பற்றி கருணாநிதி கவலையே படமாட்டார்.. மொத்தத்தையும் அழகிரியின் பொறுப்பில் விட்டுவிடுவார்.. இப்போது அப்படி ஒரு ஆளுமை தென் மாவட்டங்களில் இல்லை.. எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வரப்போகிறது.. 2 முறை ஆட்சியை தவறவிட்ட திமுக இந்த முறை எப்படியேனும் அரியனை ஏற்க பார்க்கிறது.
ஐ.பெரியசாமி
அந்த வகையில் புதிய பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமியை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்ல.. அன்று கலைஞர் இருந்தபோது, தென்மாவட்டம் சம்பந்தமாக அழகிரியிடம் ஒட்டுமொத்த பொறுப்பு இருந்தாலும், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் என்றால் ஐ.பெரியசாமி தானாக வந்து தென்மாவட்டத்தை வழிநடத்தி சென்றார்.. அந்த வகையில்தான் இவரது பெயரும் அடிபடுகிறது... ஸ்டாலின் மனசிலும் இதுதான் உள்ளது என்கிறார்கள்.
பொருளாளர்
அதனால் முதலில் துரைமுருகன், அடுத்து பெரியசாமி, இதற்கு அடுத்துதான் ஏவ வேலு பெயர்கள் என லிஸ்ட்டில் உள்ளன.. எப்படியாவது தென் மாவட்டங்களில் கட்சியின் பிடியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் தலைவரின் முக்கிய குறிக்கோளும்கூட... ஒருவேளை துரைமுருகன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டால், ஐ.பெரியசாமிக்கு பொருளாளர் பதவி வழங்கிடவும் தீர்மானித்திருப்பதாக அறிவாலய வட்டாரம் கூறுகிறது.
ஆலோசனை
மேலும் டிஆர் பாலு பெயர் முன்னிலையில் உள்ளதாம்.. சில தினங்களுக்கு முன்புதான் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.. அப்போதிருந்தே அவர் ஒருவித அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.. அதனால் டிஆர் பாலுவை சமாதானப்படுத்தி அவரை பொருளாளர் ஆக்கலாமா என்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த பொருளாளர் பதவிக்கும் பிகே ஒரு ஆலோசனை தந்துள்ளதாக சொல்கிறாராம்.. பட்டியலினத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆ. ராசா அல்லது மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கனிமொழிக்கு பதவியை தருவதும் நலன் பயக்கும் என்று தெரிவித்தாராம். உண்மையில் இதுவும் ஒரு நல்ல யோசனையே!!
முக ஸ்டாலின்
ஆனால் என்னதான் ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் கழக விதி என்று உள்ளது.. நிச்சயம் இதை கவனித்துதான் திமுக தலைவர் காய் நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல் இப்போதைக்கு எல்லாமே ஆலோசனை என்ற அளவிலேயே உள்ளது. எப்படியும் ஒரு வாரத்துக்கு திமுக தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாக வாய்ப்பில்லை.. அதனால் அனைவரும் கலந்து கூடி பேசிவருகிறார்கள்... யார் தலைமை செயலாளர் ஆனாலும் சரி, பொருளாளர் ஆனாலும் சரி.. வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்பதே முக ஸ்டாலினின் அடிப்படை எண்ணமாக உள்ளது!