"ஐயா பதில் சொல்லுங்க".. மொத்தம் 6 கேள்விகள்.. குரல் கொடுக்கும் "வன்னிய குல இளைஞன்".. முரசொலி அதிரடி
டாக்டர் ராமதாஸுக்கு திமுகவின் முரசொலி கேள்வி எழுப்பி உள்ளது
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு முரசொலியில் மொத்தம் 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.. வன்னிய குல இளைஞன் என்ற பெயரில் இந்த கேள்விகள் டாக்டர் ஐயாவிடம் எழுப்பப்பட்டுள்ளன.
டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.. இது சம்பந்தமாக அதிமுகவிடம் பலமுறை கோரிக்கை வைத்தார்.. அவர்கள் செவிமடுக்கவும் ஒருநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போதும் பாமகவுக்குதான் கெட்ட பெயரை அந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியதே தவிர, அதிமுக அதுகுறித்து பதில் ஏதும் சொல்லவில்லை.
இந்த ஒரு விவகாரத்தினாலேயே, பாமக - அதிமுக கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாமல் இழுபறியில் உள்ளது.. அதேசமயம், இடஒதுக்கீடு விஷயத்தில் பின்வாங்குவதில்லை என்ற முடிவில் பாமக உறுதியாகவும் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவை நெருக்கி தங்கள் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் தராமல், அப்படியே யூடர்ன் அடித்து திமுகவை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் டாக்டர் ராமதாஸ்.. 2 நாளைக்கு முன்புகூட, " 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை, கருணாநிதி சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டார்... நல்ல கனி என்று சொல்லி அழுகிய கனியை கொடுத்து கருணாநிதி ஏமாற்றிவிட்டார்" என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.
ஆட்டத்தை ஆரம்பித்த கருணாஸ்.. "அவங்களுக்கு" தந்தால் எங்களுக்கும் தந்தாக வேண்டும்.. அதிமுகவுக்கு செக்
இதற்கு திமுக "முரசொலி"யில் இன்று எதிர்வினை ஆற்றியுள்ளது.. "வன்னிய குல இளைஞன்" என்ற பெயரில் டாக்டர் ராமதாஸுக்கு லெட்டர் எழுதி அதில் 6 கேள்விகளையும் எழுப்பி உள்ளது... முரசொலியில் உள்ளதாவது: "வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு என்பதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என வீர கர்ஜனை புரிந்த நீங்கள், இப்போது உள் ஒதுக்கீடு என்கிறீர்கள் எப்படி அய்யா இப்படி பல்டி அடிக்க உங்களால் முடிகிறது ?
நீங்கள் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்து உங்கள் வரலாற்றை அரசியல் மாணவன் ஆராய்ந்தால் நீங்கள் அடுத்தடுத்துக் கொடுத்த வாக்குறுதிகளில் தடுக்கி விழுந்து, தடம் புரண்ட நிகழ்வுகளை கண்டு மூர்ச்சித்து விழுந்துவிடுவான்.விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என மு.க.ஸ்டாலின் பேசியபோது எத்தனை வக்கணை பேசினீர்கள் நினைவிருக்கிறதா ?
திமுக ஆட்சிக்கு வந்ததும் இப்போது நீங்கள் கேட்கும் உள் ஒதுக்கீடு பரீசிலிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் சொன்னாரே அதை எண்ணிப்பாராது அதிமுகவு ஆதரவு என்கின்றீர்கள் அய்யா? எனக்கு மட்டுமல்ல வன்னிய இளைஞர்களுக்கு புரியாத சில கேள்விகள் இருக்கின்றன. அதற்கு விளக்கம் அளிப்பீர்களா? என்றும் அத்துடன் 6 கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
1. வன்னியர்கள் பயனடையும் வகையில் பல சட்டங்களை இயற்றிய திமுகவை எதிர்க்கின்றீர்கள்; ஆனால் வன்னிய மக்களின் எந்த கோரிக்கையையாவது பல முறை நீங்கள் கூட்டணி சேர்ந்த அதிமுக நிறைவேற்றியிருக்கிறதா? ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாத அதிமுக உங்களுக்கு மட்டும் இனிப்பது ஏன்?
2. 15 % குறைவாக இட ஒதுக்கீட்டை வழங்கினால் உக்கிர போராட்டம் நடத்துவேன் என இதுவரை கூறிய நீங்கள், திடீரென 20% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கினால் போதும் என பின் வாங்கியது ஏன்?
3. பிற்படுத்தப்பட்டோருக்கான 20 % இட ஒதுக்கீட்டில் எத்தனை சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தாதனேன்?
4. சீட் ஒதுக்கீடு போன்ற பல பேரங்களுக்கு நீங்கள் ஒரு பெரும் சமூகத்தையே அடகு வைத்து உங்களை வளப்படுத்திக்கொள்ள எங்களை நட்டாற்றில் விடுவது ஏன்?
5. அன்புமணிக்கு எம்.பி. சீட் தந்ததை தவிர அதிமுக ஆட்சி வன்னிய இன மக்களுக்கு என்ன செய்தது? 21 வன்னிய உயிர்களை பலி வாங்கிய அதிமுக கட்சிக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு வழங்குவது ஏன்? பின்னணியில் பல கோடி விவகாரங்கள் இருப்பதாக கூறுவது உண்மையா?
6. இதுவரை 20% இட ஒதுக்கீடு கேட்ட நீங்கள், இப்போது எதற்காக இறங்கி வந்தீர்கள்? "பாதாளம் மட்டும் பாயும்" சக்தி வாய்ந்த பல பேரங்கள்தான் காரணம் என பலராலும் பேசப்படுவது உண்மையா? இதற்கெல்லாம் உரிய விளக்கம் வழங்குவீர்களா? மருத்துவர் ஐயா, தங்களிடம் இருந்து பதில் கிடைக்கம் என எதிர்பார்க்கறேன் என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னதாக, திமுக எம்பி செந்தில்குமாரும் இதுபோலவே, கேள்விகளை கேட்டு ட்வீட் போட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.