வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் கொல்ல வேண்டாம் தகவல் கொடுங்க - வனத்துறை அறிவிப்பு
மழை, வெள்ளத்தினால் பாம்புகள் வீடுகளுக்கு நுழைந்தால் அதை அடிக்கவோ கொல்லவோ வேண்டாம் வனத்துறை தொடர்பு கொள்ளவும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மழை வெள்ள நீருடன் அழையா விருந்தாளியாக பாம்புகள் வீட்டிற்குள் நுழைந்தால் அவைகளை அடித்து கொல்ல வேண்டாம் எங்களை உடனே அழையுங்கள் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் வனத்துறையை 044-22200335,9566184292 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவித்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளன. ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழை பெய்த உடனே வெள்ள நீர் வீடுகளுக்கு புகுந்து விடுகின்றன. கூடவே அழையா விருந்தாளியாக பாம்புகள், பூரான்கள் விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.
பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்பார்கள். நம் மக்கள் பாம்பை பார்த்த உடன் அடித்து கொன்று தூக்கி வீசி விடுவார்கள். எனவே மழைக்காலத்தில் பாம்புகளை வீடுகளுக்குள் கண்டால் அவற்றை கொல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள். சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் வனத்துறையை 044-22200335,9566184292 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவித்துள்ளனர்.
புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில்தான் பாம்புகள் தஞ்சம் புகுகின்றன. குடியிருப்பு பகுதியில் இருந்து பிடிட்ட பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல என்று கூறும் வனத்துறை அதிகாரிகள், கட்டுவிரியன், தண்ணீர் பாம்புகள், சாரை பாம்புகள், மற்றும் மண்ணுளி பாம்புகள் தான் குடியிருப்புகளில் புகுவதாக கூறியுள்ளனர்.
பாம்பு கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது :
பாம்பு கடித்த இடத்தில் கீறக் கூடாது. பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்க முயற்சிக்க கூடாது.
பாம்பு கடித்த உடனேயே பதற்றப்படக்கூடாது. கடித்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்து தேய்க்க கூடாது.
கடித்த இடத்தை அசையாமல் வைத்திருக்க வேண்டும். பாம்பு கடித்த நபரை ஒருக்களித்து படுக்க வைப்பதன் மூலம் உணவுப்பொருட்கள் மூச்சு குழாய்க்குள் போவதை தடுக்கலாம்.
பாம்பு கடித்த இடத்தை தாழ்வாக வைக்க வேண்டும். காலில் கடித்து இருந்தால் உயரமான ஸ்டூல் போட்டு காலை கீழே தொங்க விட வேண்டும். பாம்பு கடித்த உடனே அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். முதலில் விஷ முறிவு மருந்தை கொடுத்த பிறகே சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.