முதல்வர் ஸ்டாலின் வேற லெவல் "மூவ்.." சோனியா காந்தியிடம் பரிசாக கொடுத்த புத்தகத்தை கவனிச்சீங்களா?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஒரு புத்தகம் பற்றிதான் இப்போது ஓட்டு மொத்த நாடும் பேசிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றி விவாதித்தார். கோரிக்கை மனுவை வழங்கினார். இதன் பிறகு நேற்று சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் ஸ்டாலின் . அங்கு காங்கிரஸ் சீனியர் தலைவர் மற்றும் சோனியா காந்தியின் மகனான, ராகுல் காந்தியையும் ஸ்டாலின் சந்தித்தார்.
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
இதெல்லாம் வழக்கமான சந்திப்புகள் என்று எடுத்துக்கொள்ளலாம் . ஆனால் சோனியா காந்திக்கு ஸ்டாலின் கொடுத்த ஒரு புத்தகம் வழக்கமான ஒரு புத்தகம் கிடையாது அது வரலாற்று சிறப்புமிக்க புத்தகம்.
சோனியாவுக்கு கொடுத்த புத்தகம்
அந்தப் புத்தகத்தின் பெயர் Journey Of A Civilization Indus To Vaigai இந்த புத்தகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா . தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார்., சோனியா காந்திக்கு பரிசளிக்க இந்த புத்தகத்தைத் தேர்ந்து எடுத்துக் கொடுத்தது தமிழக முதல்வரின் தனி செயலாளர்களில் ஒருவரான உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகும். இவர் கடந்த ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக பதவி வகித்தவர். மிகுந்த படிப்பாளி. அதிகம் நூல்கள் ஓதக்கூடிய பழக்கமுள்ளவர். இவர் கொடுத்த இந்த பரிந்துரையை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு அந்த புத்தகத்தை சோனியாவுக்கு பரிசாக அளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் நாகரீகம்
இந்த நூலின் சிறப்பம்சம் என்ன தெரியுமா.. சிந்துசமவெளி நாகரீகம், தமிழர்களின் நாகரிகம்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பல்வேறு ஆய்வுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளுடன் இந்த நூல் நிறுவுகிறது. எனவே கூடுதலாக ஆராய்ச்சி செய்யப்பட்டால் தமிழர்களின் பாரம்பரியம், தொன்மை உள்ளிட்ட விஷயங்கள் வெளி உலகத்துக்கு வரும் என்றும் இந்த புத்தகம் சிபாரிசு செய்துள்ளது.
புத்தகத்திற்கு வரவேற்பு அதிகரிப்பு
தமிழர்களின் வாழ்வியல் உலகம் முழுக்க சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியதாக நூலாசிரியர் பாலகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதை இப்போது இன்னொருபடி உயர்த்துவதற்காக ஸ்டாலின் அந்த புத்தகத்தை சோனியாவுக்கு வழங்கியுள்ளார் . இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் இந்த புத்தகம் ஈர்த்துள்ளது. அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாடு முழுவதும் பல்வேறு நபர்களும் ஆன்லைன் மூலமாக புத்தகத்தை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், புத்தகம் விற்று தீர்ந்து விட்டதாகவும், புத்தகம் அச்சிடப்பட்டதும் மீண்டும் தெரிவிப்பதாகவும், அதன் வெளியீட்டாளர் பாரதி புத்தகாலயம் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.3000 என்றாலும் கூட மளமளவென புத்தகம் விற்பனையாகியுள்ளது.
ஒடிசா முதல்வர் ஆலோசகர்
பாலகிருஷ்ணன் தற்போது ஓடிசா மாநில முதல்வரின் ஆலோசகராக இருக்கிறார். இவர் அந்த புத்தகத்தை வெளியிட்டபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சோனியாகாந்திக்கு, பரிசு அளிப்பதன் மூலமாக இந்தியா முழுக்க இன்னும் அதிகமாக பிரபலப்படுத்தி உள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
முதல்வரின் முயற்சி
அந்த வகையில் தமிழரின் கலாச்சார செழுமையை நாடு முழுக்க மக்கள் அறிந்து கொள்ள மறைமுகமாக ஊக்க சக்தி கொடுத்துள்ளார் முதலமைச்சர் என்றுதான் சொல்லவேண்டும். தமிழர் பண்பாடு மற்றும் திராவிட கலாச்சாரம் ஆகியவற்றை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு தமிழக முதலமைச்சர் தீவிரமாக இருக்கிறார் என்பதை இந்த சிறு சிறு சம்பவங்கள் கூட உணர்த்துவதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.