கொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி!
தமிழகத்தில் 13 மாவட்ட விவசாயிகள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
சென்னை: தமிழகத்தில் 13 மாவட்ட விவசாயிகள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
உண்ணாவிரத போராட்டம் தொடங்கி பல விதமான போராட்டங்களை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களின் ஒரே கோரிக்கை தங்கள் நிலத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைக்க கூடாது என்பதுதான்.
இந்த போராட்டம் நடக்கும் இடங்களில் தற்போது ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
இந்த 13 மாவட்டங்களிலும் தற்போது மின்சாரம் கொண்டு செல்வதற்காக உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மின்சாரம் தமிழகத்தில் தயாரானது கிடையாது. சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக உயர் மின்கோபுரங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
யார் செய்கிறார்கள்
இதற்காக விவசாய நிலத்தில் பெரிய கான்கிரீட் மேடை அமைக்க வேண்டும். இந்த மின்சாரத்தில் ஒருபகுதி மின்சாரம் கேரளாவிற்கும் எடுத்துச் செல்லப்பட உள்ளது. மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த மின்சாரம்தான் தற்போது விவசாயிகள் போராட்டத்திற்கு காரணமாகி உள்ளது.
13 மாவட்டங்கள்
மொத்தம் 13 மாவட்டங்களில் இந்த மின்சாரம் எடுத்து செல்லப்படுவதற்காக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. நாமக்கல், கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இதற்காக மின்கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
எங்கே பிரச்சனை ஆகிறது
இதில் என்ன பிரச்சனை என்றால், இந்த மின்கோபுரங்கள் எல்லாம் விவசாய நிலங்களின் மீதுதான் அமைக்கப்பட உள்ளது. இதற்காக விவசாய நிலங்களில் பல்லாயிரக்கணக்கில் ஆக்கிரமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
விவசாயிகள் போராட்டம்
தற்போது இதை எதிர்த்துதான் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். நாமக்கல், கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய கூட்டமைப்பை என்று ஒன்றாக சேர்ந்து போராடி வருகிறார்கள். இதுதான் தற்போது தமிழகத்தை உலுக்கி உள்ளது.
பெரிய அளவில்
இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 12-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகிறார்கள். இதில் 6 நாட்களாக ஒவ்வொரு ஊரிலும் 10க்கும் அதிகமான விவசாயிகள் தனியாக போராடி வருகிறார்கள். தினமும் வித்தியாச வித்தியாசமான போராட்டமும் நடந்து வருகிறது.
தொடரும்
ஆனால் இந்த போராட்டம் பெரிய அளவில் இன்னும் தமிழகம் முழுக்க சென்று சேரவில்லை. ஏற்கனவே 12க்கும் அதிகமான விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டம் முடியும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறி இருக்கிறார்கள்.