மீண்டும் அரசியல்? எம்.ஜி.ஆருடன் நடிகர் விஷால்.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சம்பவம் ஞாபகம் இருக்கா?
சென்னை : திரையுலகில் இருந்து வந்து அரசியலில் சாதித்த எம்.ஜி.ஆரின் உருவத்தை நடிகர் விஷால் தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த விஷால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் எம்ஜிஆருடன் களமிறங்கி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஷால் தனது நெஞ்சில் பழம்பெரும் நடிகரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த டாட்டூ உண்மையானதா? அல்லது படத்திற்காக வரையப்பட்டதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
விஷாலின் டாட்டூ
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற திரையுலக நட்சத்திரமுமான எம்.ஜி.ஆர் உருவத்தை நடிகர் விஷால், நெஞ்சில் பச்சை குத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. எனினும், அது டாட்டூவா அல்லது படத்திற்காக வரையப்பட்டதா என்கிற தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
சினிமா டூ அரசியல்
இருப்பினும், அரசியல் ஆர்வம் கொண்ட நடிகர் விஷால், திடீரென எம்ஜிஆர் பாசத்தை வெளிக்காட்டியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் அனலைக் கிளப்பியுள்ளது. எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட புரட்சித் தலைவர் போன்று, புரட்சித் தளபதி என்ற பட்டத்தால் குறிப்பிடப்படுபவர் விஷால். ஏற்கனவே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த விஷால், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், எம்ஜிஆருடன் இறங்கியிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் விஷால்
ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் 2017ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் நடிகர் விஷால். ஆனால் அவரது வேட்பு மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுவில் 10 நபர்கள் அவரை வழிமொழிந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில், இரண்டு நபர்கள் தங்களது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்ததால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலை மறியல் செய்தார் விஷால்.
அநீதி - பொங்கிய விஷால்
பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், விஷால் தன்னிடம் இருந்த ஆடியோ ஆதாரங்களையும், மேலும் சில வாட்ஸ்அப் ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் அறிவித்தார். ஆனாலும், அதன்பிறகு விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், ஜனநாயகம் விஷால் அப்போது தெரிவித்தார்.
தேர்தல் களம்
பின்னர், அரசியல் கருத்துகள் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்த விஷால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனால், சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், தேர்தல் போட்டியிடுவது குறித்து விஷால் கருத்து கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், அதன்பிறகு அவர் அமைதியாகிவிட்டார்.
ஆந்திர அரசியல்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷால் ஆந்திர அரசியலில் இறங்கப் போவதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அதை திட்டவட்டமாக மறுத்த விஷால், "ஆந்திர அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது பற்றி மட்டும்தான் நான் யோசிக்கிறேன்" என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது எம்ஜிஆர் டாட்டூவோடு இறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.