குடல் அறுவை சிகிச்சை டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் மரணம்.. முக ஸ்டாலின் இரங்கல்
சென்னை: குடல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்றவரான டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை மையத்தின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன். சீர்காழி அருகே நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவர், 1985-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியராக பணிக்கு வந்தார்..
2008-ஆம் ஆண்டு மீண்டும் சென்னை மருத்துவக் கல்லூரியின் இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவரானார். 2015ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 63 வயதாகும் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "குடல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்றவரான டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. மருத்துவத் துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி அவர்கள் முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஒடுக்கப்பட்டோர் உரிமைப் போராளி இரட்டைமலை சீனிவாசன் புகழ் போற்றுவோம்!".. முக ஸ்டாலின்
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார் - உறவினர்கள் - நண்பர்கள் - மருத்துவத்துறையினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.