வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் - பயிற்சிக்கு சேர வாய்ப்பு வழங்கவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
சென்னை: வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மீது, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். அதன்படி, நேற்று, மருத்துவர்களின் போராட்டம் குறித்து, தமிழக அரசை விமர்சித்தார். கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றிய அரசு மருத்துவர்களை போராட வைக்கலாமா என கேள்வி எழுப்பினார்.
ஊதிய உயர்வுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் அரசு மருத்துவர்களை போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு. முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தேர்தலுக்கு முன்பு அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த வரிசையில், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் சேவை செய்வதற்காக FMG தேர்வை எழுதி, தேர்ச்சிபெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக, கடந்த ஜுலை மாதம், மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல, திமுக-வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டு விடுவார்களோ? என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.