சென்னை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டரை கழுத்தில் குத்திய நோயாளி.. சக டாக்டர்கள் கடும் ஆவேசம்
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கத்தரிகோலால் கழுத்திலேயே நோயாளி குத்தியதை கண்டித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சூர்யா என்பவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக பாலாஜி என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது, தன் கையில் சொருகி இருக்கும் குளுக்கோஸ் ஊசியினை அகற்றுமாறு நோயாளி பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த, பாலாஜி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பயிற்சி மருத்துவர் சூர்யா கழுத்தில் பயங்கரமாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சூர்யாவை, அக்கம் பக்கத்தில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு பயிற்சி மருத்துவர் சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நோயாளியால் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் பேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு வருகிற காலங்களில் உறுதிப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். பயிற்சி மருத்துவர் சூர்யா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் டீன் பேரணி ராஜன் கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் பேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும். இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்., மருத்துவமனை மருத்துவரின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்படுவார்கள். வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை ஆனது எடுக்கப்படும்" இவ்வாறு கூறினார்.
இதனிடையே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்குதலை கண்டித்து பயிற்சி மருத்துவர்களின் 3 மணி நேர திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்மையில் கேரளாவிலும் இதேபோன்று பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக நோயாளியால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.