மருத்துவர்கள் போராட்டம்.. துறை ரீதியான நடவடிக்கைக்கு இடைக்கால தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊதிய உயர்வு,பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ என்று சொல்லக்கூடிய துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸும் பணிமாறுதல் உத்தரவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை விட்டதாகவும், தற்போது உத்தரவாதத்தையும் மீறி இதுபோல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.