அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.. பாஜக டெல்லி தலைமை தான் முடிவு செய்யும்.. முருகன் அதிரடி
சென்னை: தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று மாநில பாஜக தலைவர் முருகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். எடப்பாடி முதல்வராக அறிவிக்கப்பட்டதில் தங்களுடன் அதிமுக கலந்து ஆலோசிக்கவில்லை என்று பாஜக வருத்தத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
ஏனெனில் பாஜக தலைவர்கள் ஒவ்வொருவருமே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை வரவேற்று இதுவரை அறிக்கையோ, அறிவிப்புகளோ வெளியிடவில்லை. அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை பாராட்டுகிறார்கள்.
ஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக!
தேசிய ஜனநாயக கூட்டணி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது. இந்த கூட்டணி வரும் சட்ட மன்ற தேர்தலிலும் தொடர்கிறது.
நிலைப்பாடு என்ன
சீட் பேரங்கள், தொகுதி பங்கீடுகள் இதைபற்றி எல்லாம் பேச இன்னும் பல மாதங்கள் உள்ளது என்ற போதிலும், மிக முக்கியமான முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பதை வரவேற்கும் பாஜகவினர். அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்பதை பாஜகவின் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறிவருகிறார்கள்.
யாருடன் கூட்டணி
அண்மையில் பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில். பாஜகவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம். திமுகவாகவும் இருக்கலாம். அல்லது இரண்டு இல்லாத வேறு கட்சிகளாக கூட இருக்கலாம்" என்றார்.
பிரச்சனை இல்லை
எனினும் அதன்பிறகு அளித்த பேட்டியில் கூட்டணியில் தொடரக்கூடாது என நான் சொல்ல மாட்டேன். அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்துவேறுபாடுகள் என்பது அரசாங்க ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கருத தேவையில்லை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு வந்துவிடாதா என ஓநாய் போன்று காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சனையை மிக சுமூகமாக தீர்த்துள்ளார்கள்" என்றார்.
வானதி சீனிவாசன்
இதனிடையே அடுத்த ஓரிரு நாளில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அளித்த பேட்டியில், பாஜக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில் பாஜக தலைமையில் கூட கூட்டணி அமையலாம். கூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும். அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? என்பதை எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.
முதல்வர் வேட்பாளர் யார்
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் நேற்று மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளை அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கொரோனா இந்தியாவில் குறைந்து வரக்கூடிய சூழலில் பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும். அதிமுக, பாஜ கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கே.எஸ்.அழகிரி கூறுகிறார். அவர் எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது. பிரதமர் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார். பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் உரையின் சாராம்சம். தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு கொண்டு வருகிறது. ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் மூலம் விவசாயம் மற்றும் மீன் வளத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்" இவ்வாறு கூறினார். இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை டெல்லி மேலிடம் ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பதை வெளிப்படையாக அறிவித்தால் மட்டும் இந்த விவகாரம் முடிவுக்கு வரும்.