சில்லு சில்லா செதறுதே.. 'ரூட்’ எடுக்கும் பாஜக! தாமரையை மலர வைக்க ‘பக்கா’ ஸ்கெட்ச்.. 2 பேர் ஓகேவாம்!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது யார்? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்விகள் தாறுமாறாக எழுந்துள்ள நிலையில் 'சைஸாக' பாஜக வேறொரு ரூட்டைப் பிடிப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதிமுக ஈபிஎஸ் அணி சார்பில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா அல்லது சுயேட்சை சின்னத்தில் தான் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், தாமரை சின்னத்தில் வேட்பாளரை களமிறக்கும் முயற்சிகளை பாஜக தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.
இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தொடங்கும் நாள் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் அனல் வீசப்போவது இப்போதே உறுதியாகியுள்ளது.
இடைத்தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ் அணி? மா.செக்கள் கூட்டத்திற்கு 'திடீர்’ அழைப்பு.. பரபர பிளான்! ஓஹோ!
அதிமுகவுக்கு செக்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா, மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த 6 மாதங்கள் அவகாசம் உள்ளது. ஆனால், திருமகன் ஈவெரா மறைந்த சில நாட்களிலேயே இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிமுகவுக்கு வைக்கப்பட்டிருக்கும் ‘செக்' என்றே கருதப்படுகிறது.
பலம் காட்ட ரெடி
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜ், ‘இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தமாகா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது தலைமையிலான அணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பாகவே வேட்பாளரை களம் இறக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சின்னம் முடங்குமா?
பாஜக தலைவர்கள் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தில் கையெழுத்துப் போடும் அதிகாரம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் இருக்கிறது. இருவரும் இணைந்து வேட்பாளரின் ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலால், இரு தரப்பும் பொதுவான வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் சூழலே இருக்கிறது.
எடப்பாடி கன்ட்ரோல்
எடப்பாடி பழனிசாமி கட்சி எனது கட்டிப்பாட்டில் உள்ளது என தொடர்ந்து பேசி வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளரை களமிறக்கி திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் எதிர்ப்பு காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளைப் பெறுவோம் என்றும் தனது தலைமையில் உள்ள கட்சிக்கு இது ஒரு அங்கீகாரமாக அமையும் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வேறு ரூட் பிடிக்கும் பாஜக
ஆனால் பாஜகவோ வேறு மாதிரியான கணக்குகளை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இரட்டை இலை சின்னம் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதை விட பாஜகவின் தாமரை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தலாம் என எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தாமரை சின்னத்தில் நிறுத்தலாம் என்ற முடிவை நோக்கி ஈபிஎஸ்ஸுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் திட்டம்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்காமல் முடக்கினாலே பெரிய வெற்றியாக கருதுகிறது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தாமரை சின்னம் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட்டால், ஓபிஎஸ்ஸும் அவருக்கு ஆதரவளிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. பாஜக தலைமையின் தயவை நாடி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதற்குக் கைம்மாறாக பாஜகவின் இந்த முடிவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை
வரும் ஜனவரி 23ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஒபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்படுமா? அல்லது எடப்பாடிக்கு போட்டியாக வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்படுமா என்பது பற்றி ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பாஜக கணக்கு
அதிமுகவில் நிலவி வரும் குழப்ப சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தாமரை சின்னத்தை களமிறக்க பாஜக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு சீட் ஒதுக்கப்பட்டாலும் இரட்டை இலை கிடைக்காவிட்டால், சுயேட்சை சின்னத்தில் நிற்பதை விட தாமரை சின்னத்தில் நிற்பதையே தமாகா தலைவர் ஜிகே வாசனும் விரும்புவார். அதற்கு ஓபிஎஸ்ஸும் ஆதரவளிப்பார், இதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தாமரை இறக்கி விளையாடிப் பார்க்கும் கணக்கில் பாஜக இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
எடப்பாடிக்கு நெருக்கடி
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் தான் தாமரையை களமிறக்க முடியும் என்பதால், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்க பாஜக விடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தாமரை சின்னத்தில் போட்டியிட ஜிகே வாசன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஒப்புக்கொள்வார்கள், ஒரே எதிர்ப்புக் குரல் ஈபிஎஸ் தரப்பாகத்தான் இருக்கும். இரட்டை இலை சின்னத்தை முடக்கினால், எடப்பாடி தரப்புக்கும், பாஜகவின் திட்டத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை, இதுதான் பாஜகவின் ஸ்கெட்ச் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.