மாநிலங்களிடையே பயணிக்க இனிமேல் இ பாஸ் தேவையில்லையா.. பரவும் தகவல்.. உண்மை என்ன?
சென்னை: மாநிலங்களிடையே தனியார் வாகனங்கள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை என்பது போல மத்திய அரசு விதிமுறைகளை மாற்றி உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அன்லாக் 3.0 என்ற பெயரில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவில், பல்வேறு புதிய தளர்வுகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
யோகா பயிற்சி மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படலாம், பொதுப் போக்குவரத்து தளர்வு அல்லது முடக்கம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முடிவெடுக்கலாம், இரவு நேர ஊரடங்கு உத்தரவு இனிமேல் கிடையாது என்பது போன்ற பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டன.
ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!
இ பாஸ் தேவையில்லையா?
இருப்பினும், பள்ளி, கல்லூரிகளை திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும். மெட்ரோ ரயில் திரையரங்குகள் போன்றவை இயங்காது என்று ஆகஸ்டு 31ம் தேதி வரைக்குமான இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேதான், மாநிலங்களுக்கு இடையேயான தனிநபர் வாகன போக்குவரத்துக்கு இனிமேல் இ பாஸ் தேவை இல்லை என்று மத்திய அரசு தனது அறிவிப்பில் தெரிவித்ததாக நேற்று இரவு முதல் தீயாக தகவல் பரவி வருகிறது.
மாநில அரசு அதிகாரம்
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதுமாதிரி எந்த தகவலும் இடம் பெறவில்லை. எனவே அரசு தரப்பில் விசாரித்தோம். அப்போதுதான் ஒரு தகவல் தெரியவந்தது. கடந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு காலகட்டத்திலேயே இ பாஸ் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், இதில் மத்திய அரசு தலையிடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இது ஒன்றும் புதிய அறிவிப்பு கிடையாது.
கர்நாடகாவில் இ பாஸ் மாற்றங்கள்
மத்திய அரசு இதுபோல முன்பு அறிவித்த பிறகுதான் சில மாநிலங்கள் இ பாஸ் முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. உதாரணத்துக்கு, வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோருக்கு இ பாஸ் தேவையில்லை என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன. அதற்கு பதிலாக, சேவா சிந்து என்ற வெப்சைட்டில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு பதிவு செய்துவிட்டு மாநிலத்திற்குள் எந்த தடையுமின்றி வரலாம் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
மாற்றமில்லை
இருப்பினும், குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நாட்களில் ஸ்லாட் ஒதுக்கப்படுகிறது. அதில் ஸ்லாட் கிடைக்காவிட்டால், இன்னொரு நாளில் முயற்சி செய்து பார்க்கலாம். இது கர்நாடக நடைமுறை. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தளவில் பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் செல்வோருக்கு இ பாஸ் பெறுவது என்பது இன்னும் கட்டாயம் தான். மாவட்டங்கள் இடையே கூட இ பாஸ் கட்டாயம்தான். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவால் திடீரென்று எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. எனவே இ பாஸ் தேவையில்லை என்ற தகவலை நம்ப வேண்டாம்.
இ பாஸ் பற்றி முடிவு
இ பாஸ் விஷயத்தில், அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தவுள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இ பாஸ் தொடர்பாக முதல்வர் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதுவரை தமிழகத்துக்கு செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்ற தகவல்களை நம்ப வேண்டாம்.