எண்ணையை தடவி உருண்டாலும் ஒட்டுற மண்தானே ஒட்டும்.. ஜாதி அரசியலை கையில் எடுக்கிறதா பாஜக?
தமிழகத்தில் சாதி அரசியலை பாஜக கையில் எடுப்பதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: சுத்த்தம்.. தமிழகத்தில் எப்படி எப்படியோ, எங்கெங்கோ சுத்தி.. தாமரையை மலரவே வைக்க முடியாத பட்சத்தில், கடைசியில் ஜாதி அரசியலை பாஜக கையில் எடுப்பதாக கூறப்படுகிறது.
முதல்முறை மோடி பிரதமராக இருந்தபோது, தமிழகத்தில் தாமரையை கை விட்டு துழாவி பார்க்க வேண்டிய நிலைமையில் இருந்தது.
இதற்கு பிறகு 2-வது முறையாக, அதாவது நடந்து முடிந்த எம்பி தேர்தலின்போதுதான், "என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும்" என்று அமித்ஷா கண்டிப்புடன் தெரிவித்தார். ஆனாலும் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணைதான் கவ்வ முடிந்தது.
முத்தலாக்
நாடு முழுக்க பாஜகவை மெச்சிக் கொண்டாலும் தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டுதான் இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக முத்தலாக், காஷ்மீர் விவகாரம், இந்தி திணிப்பு, ஒரே தேசம் ஒரே மொழி.. இப்படி எல்லாமே சேர்ந்து கொண்டதால் இன்னும் சுணக்கத்தில் காணப்படுகிறது. அதனால்தான் தமிழக பாஜக நிர்வாகிகள் மீது பாஜக தலைமை செம கடுப்பில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே இன்னும் மாநில தலைமையைகூட நியமிக்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிப்போர்ட்
இது ஒரு பக்கம் இருந்தாலும், வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்குள் எப்படியாவது தமிழகத்தில் பாஜகவை வேரூன்றிவிட வேண்டும் என்றே பாஜக திட்டம் போட்டு வருகிறது. அதற்காக நேரடி கள ரிப்போர்ட், உளவுத்துறை ரிப்போர்ட் இது போன்றவற்றின் மூலம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு பாஜக தலைமை வந்துள்ளதாக தெரிகிறது.
வன்னியர்
அதன்படி, அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, 2 திராவிட கட்சிகளுமே நாடார் இன மக்களுக்கும், வன்னியர் இன மக்களுக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் போதுமான முக்கியத்துவம் தருவதில்லை என்ற எண்ணம், அந்தந்த சமுதாய மக்களிடையே நிலவி வருகிறது. இதனால் திராவிட கட்சிகள் மீது வருத்தத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தந்திரம்
இந்த சூட்சுமத்தைதான் பாஜக தந்திரமாக கையில் எடுத்து செயல்படுத்த துவங்கி உள்ளது. அந்தந்த சமுதாய இனத்தை பெருமைப்படுத்தும் வகையில், அல்லது முக்கியத்துவம் அளிக்கும்வகையில் ஒரு பதவியை தந்து கௌரவிக்க முடிவு செய்துள்ளதாம்.
நாடார்கள்
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜனின் நியமனமும் அப்படிப்பட்ட ஒன்றுதானாம். இதேபோல, இஸ்ரோவில் உயர் பதவியில் உள்ள நாடார்களுக்கும் பாஜக அரசு முக்கியத்துவம் தந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியே ஒவ்வொரு இனத்தையும் கவுரவப்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டால், அந்தந்த இன மக்களுக்கு பெருமையும், மகிழ்ச்சியும் கிடைக்க செய்யும் என்பது உண்மைதான். மேலும், எந்த விஷயத்திலும் மசியாத ஒன்று, இந்த சாதி அரசியலில் பாஜகவுக்கு மசியவே செய்யும்.
தாமரை கருகிவிடும்
அதே நேரம், ஏற்கனவே சாதி அரசியலில் தமிழகம் சின்னாபின்னமாகி கொண்டிருக்கும்போது, பாஜகவின் இந்த செயல்பாடுகள், எரிகிற தீயில் மேலும் எண்ணெயை ஊற்றுவது போல ஆகிவிடுமா என்பது தெரியவில்லை. அப்படி ஒருவேளை.. சாதி தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிட்டால், தமிழகத்தில் இப்போது கொஞ்ச நஞ்சம் மலர்ந்திருக்கும் தாமரையின் மொட்டுகூட அதே தீயில் கருகி பொசுங்கிவிடும் என்பதே உண்மை!