குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா?.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு
சென்னை: தமிழகத்தில் தண்ணீருக்காக மக்கள் தவித்து வரும் நிலையில் உதவி செய்ய வேண்டுமே தவிர, திமுக ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்ற செயல் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களுக்கு தண்ணீர் தேவைக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது திமுக தான் குற்றம்சாட்டிய அவர், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலில் உள்ளது போல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறை படுத்த வேண்டும். புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.
மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது என்றும் பேசினார்.