அநியாயமா செத்துப் போய்ட்டீங்களே.. விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பூனைகளுக்கு கண்ணீர் அஞ்சலி!
சென்னையில் நாய் மற்றும் எட்டு பூனைகளும் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன
சென்னை: தெருநாய்கள் குரைச்சிட்டே இருந்ததாம்.. அதுக்காக பக்காவாக பிளான் பண்ணி ஒருத்தர் கொலையே செஞ்சுட்டார்! இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு பொதுமக்கள் கதறியபடியே கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் ஒரு தொழிலாளி வசித்து வருகிறார். இவர் பெயர் விஜயகுமார். இவரது தெருவில் நாய்கள் அதிகம் இருக்குமாம். ஒரு நாய் கத்தினால் எல்லா நாயும் சேர்ந்து குரைப்பது வழக்கம். அப்படித்தான் விஜயகுமார் போகும்போதும் நாய்கள் குரைத்துள்ளன.
ஆனால், நாய்கள் இப்படி குரைப்பது விஜயகுமாருக்கு பிடிக்கவில்லை.. எரிச்சலை தந்திருக்கிறது. எப்ப பார்த்தாலும் இந்த நாய்கள் இப்படி குரைக்கிறதே என்று, பேசாமல் இவைகளை விஷம் வைத்து கொன்றுவிடலாம் என முடிவு செய்தார்.
நாய் இறந்தது
நேற்றுமுன்தினம் இரவு கடைக்கு போய் சிக்கன் பக்கோடா வாங்கினார். அதில் மயில் துத்தம் விஷத்தை கலந்தார். கொண்டு வந்து தெருவில் வைத்துவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். சின்ன வாசனை வந்ததும், ஒரு நாய் ஓடிவந்து ஆசையாக சாப்பிட்டது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த நாய் இறந்துவிட்டது.
பூனைகள்
இதில் என்ன ஒரு சோகம் என்றால், சிக்கன் வாசனையை மோப்பம் பிடித்து கொண்டு, அந்த பகுதியில் இருந்த பூனைகளும் வந்துவிட்டதாம். அதுவும் 8 பூனைகள்.. சிக்கன் பக்கோடாவை போட்டி போட்டு சாப்பிட்டுள்ளன. ஆனால் 8 பூனைகளுமே அந்த தெருவில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் விழுந்து இறந்துகிடந்தன. இதனுடன் சில எலிகள்கூட சிக்கனை சாப்பிட்டு இறந்து கிடந்தன.
இறுதி அஞ்சலி
இதை நேற்று காலைதான் அந்த தெருமக்கள் பார்த்துள்ளனர். இறந்துபோன 8 பூனைகளுமே அந்த தெருவில் உள்ளவர்களின் வளர்ப்பு பூனைகளாம். அதனால் பூனைகளை ஒன்றாக சேர்த்து வைத்து கதறி அழுதனர். நம் குடும்பத்தில் உள்ளவர்கள் தவறிவிட்டால், அவர்களுக்கு செய்யும் இறுதி அஞ்சலி போல பூனைகளுக்கும் செய்யப்பட்டது.
கைது
ஒவ்வொரு பூனைக்கும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில் அந்த பகுதி மக்கள் அனைவருமே கலந்து கொண்டனர். நாய், பூனைகள் இறந்துவிட்டது சம்பந்தமாக திருவொற்றியூர் போலீசில் புகார் தரவும், அடுத்த சில மணி நேரத்தில் விஜயகுமார் சிக்கினார். அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.