'நாய்க்கறி' தகவல் பின்னணியில் பெரும் சதித்திட்டம்.. எஸ்.டி.பி.ஐ கட்சி சந்தேகம்
Recommended Video
சென்னை: ஆட்டுக்கறியை நாய்க்கறி என விசமப் பிரச்சாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் முகைதீன், மாநில இணைச் செயலாளர்கள் கலீல், அய்யூப்கான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
[நாய்க்கறி என்பது வதந்தி.. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டனம் ]
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி கூறியதாவது;
கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைதளங்களில் விற்பனைக்கு வந்த ஆட்டுக்கறியை, நாய்க்கறி என்று, எந்தவித ஆதாரமுமின்றி, உறுதிசெய்யப்படாமல் தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வதந்தியால் தலைநகரம் சென்னை மட்டுமின்றி, தமிழகமே ஒரு பரபரப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனால், இறைச்சி தொழில் வாழ்வாதாரத்தை நம்பி இருக்கக்கூடிய வியாபாரிகளின் நிலை மிகவும் கவலையளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
ராஜஸ்தானில் ஆட்டுக்கறி விலை குறைவாக உள்ளதால், சென்னையில் உள்ள வியாபாரிகள் ராஜஸ்தானில் இருந்து ஆட்டுக்கறியை இறக்குமதி செய்கின்றனர். ரயில் மூலமாக சென்னைக்கு வரும் ஆட்டுக்கறி, முழுமையான பரிசோதனைக்குப் பிறகே, சென்னை வந்து சேருகின்றது.
ராஜஸ்தானில் காணப்படும் வெள்ளாடுகளின் வால்கள் ஒரு அடி வரை வளரக்கூடியவையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஆடுகளின் வால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதேப்போன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து ஆட்டுக்கறி பார்சல்கள் வந்துள்ளது. இதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித பரிசோதனையும் செய்யாமல், நாய்க்கறி என்று கூறியுள்ளனர். இந்த தகவல் ஊடகங்களுக்கு சென்று, சமூக வலைதளத்திலும் பரவலாக்கப்பட்டது.
எந்தவித பரிசோதனைக்கும் உட்படுத்தாமல், ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வதந்தி சமூக வலைதளங்களால் பரப்பப்பட்டதால், வியாபாரிகளின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரும் சதித்திட்டம் உள்ளதாக தெரிகின்றது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வதந்தி பரப்பிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த சம்பவத்தால் சென்னையில் உள்ள வியாபாரிகள் மிகவும் கவலையில் உள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளத்தில் ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று வதந்தி பரப்பியவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்." என தெரிவித்தார்.