மாணவர்கள் இனி பைக்கில் பள்ளிக்கு வர முடியாது.. பள்ளி கல்வித்துறையின் புதிய அதிரடி உத்தரவுகள்
சென்னை: இருசக்கர வாகனம் ஓட்டிவரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுளளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சாலை பாதுகாப்பு விதிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதன்படி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வரும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
காலையில் இறை வணக்க கூட்டத்தின் போது சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்புவதால் தான், மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படி பயணிக்கின்றனர். எனவே 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை அனுப்ப வேண்டும்.
பள்ளிக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றங்களை துவக்கி, அதில் மாணவர்களை சேர்த்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டிவரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.