வதந்திகளை நம்பாதீர்.. கிரேஸி மோகன் மரணத்திற்கு காரணம் என்ன? சகோதரர் மாது பாலாஜி விளக்கம் - வீடியோ
Recommended Video
சென்னை: திரைப்பட வசன கர்த்தா, கிரேஸி மோகன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம், தமிழக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக, மாறுபட்ட தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், கிரேஸி மோகன், சகோதரரான, மாது பாலாஜி ஒரு விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜூன் 10ம் தேதி, மதியம் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். போனிலும், நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், நிறைய பேர் எங்களை போனில் அழைத்து, துக்கம் விசாரித்தனர். அவர்களுக்கு நன்றி.
இந்த பதிவை இப்போ போட காரணம், நாங்கள் மிகவும் ஷாக்கில் இருக்கிறோம். கிரேஸி மோகன் வியாதி வந்து சாகவில்லை. 10ம் தேதி காலை 7.30 மணி, 7.45 மணியளவில் கிரேஸி மோகனை நான் சந்தித்தேன். வழக்கம்போல ஜாலியாக பேசினார். அவருக்கு நீரிழிவு, பிபி நோய்கள் கிடையாது.
காலை 9.15 மணியளவில் காலை உணவு சாப்பிட்டார். 9.30 மணியளவில், கிரேஸி மோகன் எனக்கு கால் செய்தார். மூச்சுமுட்டுற மாதிரி இருக்கிறது, அடி வயிற்றில் வலிக்கிறது என கூறி வரச்சொன்னார். நான் உடனே அவர் வீட்டுக்கு சென்றேன். மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து காரில், அவரை கூட்டிக் கொண்டு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
டாக்டர்கள் தீவிரமாக முயற்சி செய்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் பெரிய அளவுக்கான ஹார்ட்அட்டாக் இருந்ததால், கிரேஸி மோகன் மரணமடைந்தார். டாக்டர்களை ஒரு குறையும் சொல்ல கூடாது என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
கிரேஸி மோகனுக்கு உடலில் வேறு எந்த பிரச்சினையும் இருந்தது கிடையாது. அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். நம்மை சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என முடிவு செய்துவிட்டு, அவர் கிளம்பி சென்றுவிட்டார். அவ்வளவுதான். நான் பிறகு விரிவாக பேசுகிறேன். இவ்வாறு மாது பாலாஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.